சிறைகளிலுள்ளோரில் 60 வீதமானோர் போதைப் பாவனை

சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளில் 60 சதவீதமானோர் போதைப்பொருள் பாவனை மற்றும் அதனுடனான குற்றங்களுடன் தொடர்புடையவர்கள்.

போதைப்பொருள் பாவனையாளர்களுக்கு வயது அடிப்படையில் புனர்வாழ்வளிக்க தெற்கு மற்றும் மேல் மாகாணங்களில் விசேட புனர்வாழ்வு மையங்களை அமைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது என நீதி,சிறைச்சாலைகள் அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அனுராத ஜயரத்ன தெரிவித்தார்

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (11) இடம்பெற்ற வாய்மூல விடைக்கான வினாக்களின் போது பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,

கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு சிறைச்சாலை,திருகோணமலை சிறைச்சாலை என இரண்டு சிறைச்சாலைகள் காணப்படுகின்றன.

மட்டக்களப்பு சிறைச்சாலையில் 168 கைதிகளையும்,திருகோணமலை சிறைச்சாலையில் 112 கைதிகளையும் தடுத்து வைக்க முடியும்,ஆனால் தற்போது மட்டக்களப்பு சிறைச்சாலையில் 593 கைதிகளும், திருகோணமலை சிறைச்சாலையில் 347 கைதிகளும் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள்.

இதற்கமைய மட்டக்களப்பு சிறைச்சாலையில் 425 கைதிகளும்,திருகோணமலை சிறைச்சாலையில் 235 கைதிகளும் கொள்ளளவை விஞ்சியதாக தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள். சிறைச்சாலைகளில் காணப்படும் நெரிசல்களுக்கு தீர்வு காண அமைச்சு மட்டத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பிரதான நகரங்களில் உள்ள சிறைச்சாலைகளை பிறிதொரு பகுதிகளுக்கு கொண்டு செல்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கண்டி நகரின் மையத்தில் இருந்த போகம்பர சிறைச்சாலை பல்லேகல பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.போகம்பர சிறைச்சாலை இருந்த காணியை நகர அபிவிருத்தி அதிகார சபை நிர்வகிக்கிறது.

40 ஹேக்கர் நிலப்பரப்பை கொண்டுள்ள வெலிகட மெகசின் சிறைச்சாலையை ஹொரன பகுதிக்கு கொண்டு செல்வற்கான பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளன.

மெகசின் சிறைச்சாலை காணியை வணிக நடவடிக்கைகளுக்கு பயன்படுத்த நகர அபிவிருத்தி அதிகார சபை பயன்படுத்தவுள்ளது.

நாட்டில் உள்ள சிறைச்சாலைகளில் சுமார் 13 ஆயிரம் கைதிகளை மாத்திரம் தடுத்து வைப்பதற்கான கொள்ளளவு காணப்படுகிறது.

ஆனால் சகல சிறைச்சாலைகளிலும் 28453 கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களில் 60 சதவீதமானோர் போதைப்பொருள் பாவனை மற்றும் அதனுடனான குற்றங்களுடன் தொடர்புடையது.

போதைப்பொருள் பாவனை மற்றும் அதனுடனான குற்றங்களுக்கான கைது செய்யப்பட்டவர்களுக்கு வயது அடிப்படையில் புனர்வாழ்வளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய தெற்கு மற்றும் மேல் மாகாணங்களில் விசேட புனர்வாழ்வு மையங்களை நிர்மாணிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது என்றார்.

Related posts