எவ்வித சமரசமும் இன்றி அநீதி திரைப்படம்

எவ்வித சமரசமும் இன்றி அநீதி படத்தை உருவாக்கி இருப்பதாக இயக்குநர் வசந்த பாலன் தெரிவித்துள்ளார்.

இயக்குநர் வசந்த பாலனின் அடுத்த படைப்பாக அர்பன் பாய்ஸ் நிறுவனத்தின் ‘அநீதி’ திரைப்படம் ஒரே சமயத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் வெளியாகிறது.

தெலுங்கு பதிப்பிற்கு ‘பிளட் அண்டு சாக்லேட்’ என்று பெயரிடப்பட்டுள்ள நிலையில், இரண்டு மொழிகளிலும் ஒரே சமயத்தில் ஜூலை 21 தேதி இத்திரைப்படம் வெளியாகவுள்ளது.

அநீதி படத்தில் அர்ஜூன் தாஸ், துஷாரா விஜயன் ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த நிலையில் அநீதி படக்குழுவின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு இன்று நடந்தது.

அதில் இயக்குநர் வசந்த பாலன் பேசியதாவது: “வல்லான் வகுத்ததே நீதி, எளியோருக்கு இங்கு அநீதி என்ற இந்த காலகட்டத்தில் நீதியை உரக்கச் சொல்ல இந்த ‘அநீதி’ திரைப்படம் வருகிறது. நீதி கிடைக்காதவர்களின் குரலாக இப்படம் ஒலிக்கும்.

எளிமையான மனிதர்களின் வாழ்க்கையை இது பிரதிபலிக்கும்.

மொத்த உலகமும் சிறு அன்பை எதிர்பார்த்தே சுழல்கிறது. அதை இப்படத்தின் மூலம் சொல்ல முயற்சித்துள்ளோம்.

நண்பர்கள் அனைவரும் ஒரு குடும்பமாக இப்படத்தை தயாரித்துள்ளோம். இயக்குநர் ஷங்கர் சார் ‘வெயில்’ படத்தை தயாரித்து எனக்கு வாய்ப்பளித்தார்.

நான் தயாரிப்பாளராக மாறி உள்ள ‘அநீதி’ படம் குறித்து அவருக்கு தெரிவித்தபோது, தனது எஸ் பிக்சர்ஸ் சார்பில் அதை வழங்குவதற்கு முன்வந்தார்.

அவருக்கு மிக்க நன்றி. இப்படத்தில் பணியாற்றிய ஒவ்வொருவரும் தங்களது மிகச்சிறந்த பங்களிப்பை அர்ப்பணிப்புடன் வழங்கி உள்ளார்கள்.

இவர்களை எல்லாம் ஒருங்கிணைப்பதற்கான வாய்ப்பு எனக்கு கிடைத்ததற்கு மிகுந்த மகிழ்ச்சி. அர்ஜுன் தாஸ் ஷாருக்கான் போன்று வருவார் என்று இங்கு கூறினார்கள். உண்மையிலேயே அவருக்கு அதற்கான திறமை இருக்கிறது.

இந்த படத்தை எந்தவித சமரசமும் இல்லாமல் உருவாக்கி இருக்கிறோம், அனைவருக்கும் நன்றி.”
நடிகை துஷாரா விஜயன்: “இயக்குநர் வசந்த பாலன் மிகுந்த அர்ப்பணிப்பு மிக்கவர்.

ஒப்பனை இல்லாமலேயே இப்படத்தில் என்னை மிகவும் அழகாக காட்டிய ஒளிப்பதிவாளருக்கு நன்றி. அர்ஜுன் தாசுடன் நடித்தது மகிழ்ச்சியாக இருந்தது.

அவர் ஒரு சிறந்த நடிகர். இப்படத்திற்கு ஆதரவளிக்குமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்.”

நடிகர் அர்ஜுன் தாஸ்: “இயக்குநர் வசந்தபாலன் என்னை சந்திக்க வேண்டும் என்று கூறிய போது வில்லன் பாத்திரத்தில் நடிக்கத்தான் கூப்பிடுகிறார் என்று எண்ணினேன்.

ஆனால் அவர் சுமார் 3:30 மணி நேரம் எனக்கு கதையை பொறுமையாக விவரித்ததுடன், இதில் நாயகனாக நடிக்க வேண்டும் என்று கூறி என்னை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார். அடுத்த நாளே இந்த படத்தில் நடிக்க நான் ஒப்பந்தமானேன்.

அவருடன் பணியாற்றியது மிகச்சிறந்த அனுபவம், மீண்டும் ஒருமுறை அவரது படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைக்கும் என்று நம்புகிறேன்.

இப்படத்தில் அனுபவமிக்க பல நடிகர்களுடன் நடித்தது நல்லதொரு வாய்ப்பாக அமைந்தது. ‘அநீதி’ படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் ஆதரவளித்த அனைவருக்கும் மிக்க நன்றி.”

Related posts