‘தண்டட்டி’ நாயகனாக பசுபதி

பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில் ராம் சங்கையா இயக்கியுள்ள புதிய படம், ‘தண்டட்டி’. கதையின் நாயகனாக பசுபதி நடித்துள்ளார். முக்கிய கதாபாத்திரங்களில் ரோகினி, விவேக் பிரசன்னா, அம்மு அபிராமி, தீபா, செம்மலர் அன்னம் உள்பட பலர் நடித்துள்ளனர். கே.எஸ்.சுந்தரமூர்த்தி இசையமைத்துள்ளார். மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவு செய்துள்ளார். சுந்தரமூர்த்தி இசையமைத்துள்ளார்.

‘தண்டட்டி’ படம் உலகம் முழுவதும் வெள்ளிக்கிழமை திரைக்கு வருகிறது. இதுகுறித்து படத்தின் இயக்குனர் ராம் சங்கையா கூறியதாவது:- என்னதான் கிராமத்து காவியங்களை படமாக மீட்டுறு வாக்கம் செய்து வந்தாலும், நமக்குள்ள வரலாறு தொலைந்து போகிறதே… என்ற ஆதங்கம் எனக்கும் வந்தது.

அதன் விளைவாக எடுக்கப்பட்டதே, ‘தண்டட்டி’ படம். கிராமத்து பாட்டிமார்கள் காதில் அணிந்திருக்கும் ஒரு அணிகலன் தான் தண்டட்டி என்றாலும், இந்த தண்டட்டி அணிபவர்கள் எண்ணிக்கை தற்போது மிகவும் குறைந்துவிட்டது.

இதே நிலை நீடித்தால் இன்னும் 10, 15 ஆண்டுகளில் இந்த அணிகலன் இல்லாமல் போகலாம். இளைய தலைமுறை தண்டட்டி குறித்து அறிந்து கொள்ள இந்த படம் ஒரு தொடக்கமாக இருக்கும். இந்த படத்தின் கதையை நான் சொன்னதுமே, தயாரிப்பாளர் லக்ஷ்மன் சார் உடனடியா ஓகே சொன்னார்.

படத்தை எடுக்கவும் ஆர்வம் காட்டினார். அதன் பிறகு படத்துக்கு உயிர் கிடைத்தது. நினைத்தபடியே நல்லவிதமாக படம் உருவாகி இருக்கிறது. இந்த படத்தின் முதுகெலும்பு என்றால் அது பசுபதியும், ரோகிணியும் தான். படத்தின் கதையை சொன்னபோதே, இருவரும் உடனடியாக நடிக்க ஒப்புக்கொண்டார்கள். அப்போதே படத்தின் ரசனையை என்னால் உணர முடிந்தது. ஒவ்வொரு நாள் படப்பிடிப்பும் ஒவ்வொரு அனுபவமாக அமைந்தது.

படப்பிடிப்பின்போது நடந்த கலாட்டாக்களும், நிகழ்வுகளும் மறக்க முடியாத அனுபவம் ஆகும். நடிகர்-நடிகைகளின் திறமையான, நேர்த்தியான நடிப்பாலும், திரைக்கலைஞர்களின் உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பு உணர்வாலும் இன்றைக்கு இந்த படம், எதிர்பார்த்ததை விட சிறப்பாக வந்திருக்கிறது.

இதற்காக ஒட்டுமொத்த படக்குழுவுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறோம். மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவில் காட்சிகளும், சுந்தரமூர்த்தி இசையில் பாடல்களும், பின்னணி இசையும் பிரமாதமாக அமைந்திருக் கின்றன. சமீபத்தில் கூட படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டு, ரசிகர்களின் கவனத்தை பெரிதும் ஈர்த்திருக்கின்றன.

இதுவே எங்களுக்கு பெரும் உத்வேகத்தை கொடுத்துள்ளது. சமீபத்தில் படத்தின் சிறப்பு காட்சி, விமர்சகர்கள் மற்றும் பத்திரிகையாளர்களுக்கு திரையிட்டு காண்பிக்கப்பட்டது. படத்தை பார்த்த அனைவருமே மெய்சிலிர்த்து விட்டார்கள். ஒவ்வொரு காட்சியையும் ரசித்து, வியந்து பார்த்தனர். படத்தின் சில காட்சிகளை சீட்டின் நுனியில் இருந்து விமர்சகர்கள் பார்த்ததை கண்டு மகிழ்ந்தோம்.

படத்தின் இறுதியில் விமர்சகர்களும், பத்திரிகையாளர்களும் எழுந்து நின்று கைதட்டி படக்குழுவுக்கு பாராட்டு தெரிவித்தது எங்களை மகிழ்ச்சியும், நெகிழ்ச்சியும் அடைய செய்துவிட்டது. இதுவே எங்களுக்கு மிகப்பெரிய அங்கீகாரமும், பெருமையாகவும் அமைந்தது. ஒரு நல்ல படத்தை எடுத்த திருப்தி எங்களுக்கு கிடைத்ததில் மிகவும் ஆனந்தம் கொள்கிறோம்.

இவற்றில் சில விமர்சனங்கள் பின்வருமாறு:- * எப்போதாவது சில படங்கள் ஈர்க்க, ரசிக்க, லயிக்க, சிரிக்க வைக்கும். இவை அனைத்தின் கூட்டுக்கலவையாக தண்டட்டி வந்துள்ளது. இது தமிழ் சினிமாவின் தரமான வெல்லக்கட்டி. இனிக்க இனிக்க கொண்டாட வேண்டிய தரமான படைப்பு. மண் மனம் மாறா செலுலாய்டு சித்திரம். வெல்டன். * நல்லதொரு பொழுதுபோக்கு படம்.

அனைத்து உணர்வுகளும் ஒருசேர கலவையாக தண்டட்டி கொடுத்திருக்கிறது. முதல் பாதி கலாட்டா. 2-ம் பாதி உணர்ச்சிமயம். பசுபதி, ரோகிணி வெளுத்து வாங்கிவிட்டார்கள்.

* குடும்ப உறவுகளின் சிக்கல், துக்க வீட்டில் நடக்கும் கலாட்டாக்கள் சுவாரசியமாக சொல்லப்பட்டுள்ளது. பசுபதி, ரோகிணிக்கு இது முக்கியமான படம். காமெடி, வட்டார வழக்கு, திருப்பங்கள், கதாபாத்திரங்கள், பிளாஷ்பேக், கிளைமேக்ஸ் அருமை.

* தென்மாவட்ட கிராமத்து மக்கள் வாழ்வியலை காதல், காமெடி, பாசம், வெகுளித்தனம் கலந்து சொல்லும் அருமையான கதை. குடும்பத்துடன் பார்த்து ரசிக்கலாம்.

* அருமையான நடிப்பு. நடிகர்கள் அனைவருமே வாழ்ந்து காட்டியிருக் கிறார்கள். படக்குழுவை எவ்வளவு பாராட்டினாலும் தகும். தியேட்டர்களுக்கு சென்று பார்க்கவேண்டிய தரமான படம். இப்படி நல்ல விமர்சனங்களை பெற்ற தண்டட்டி படம் உலகம் முழுவதும் வெள்ளிக்கிழமை திரைக்கு வருகிறது. தரமான இந்த படம் அனைத்து தரப்பு ரசிகர்களுக்கும் பிடிக்கும். ரசிகர்கள் தியேட்டர்களுக்கு சென்று படத்தை பார்த்து ஆதரவு தரவேண்டும், என இயக்குனர் ராம் சங்கையா தெரிவித்தார்.

Related posts