முன்னாள் புளொட் உறுப்பினருக்கு மரணதண்டனை

வவுனியாவில் வைத்தியர் ஒருவரை சுட்டுப்படுகொலை செய்த சம்பவத்துடன் தொர்புடைய நபர் ஒருவருக்கு வவுனியா மேல் நீதிமன்றம் மரணதண்டனை வழங்கி தீர்ப்பளித்தது.

வவுனியாவில் கடந்த 2009 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 20 ஆம் திகதி கற்குழியில் அமைந்துள்ள தனியார் வைத்தியசாலையில் கடமையில் இருந்த வைத்தியர் ஒருவர் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டிருந்தார்.

இது தொடர்பில் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டவருக்கு எதிராக வழக்கு விசாரணை இடம்பெற்று வந்த நிலையில் சட்ட மாஅதிபரினால் வவுனியா மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.

மேல் நீதிமன்றில் இது தொடர்பான வழக்கு விசாரணைகள் முடிவடைந்த நிலையில் இன்றைய தினம் தீர்ப்புக்காக தவணையிடப்பட்டிருந்தது.

அந்த வகையில் உயிரிழந்தவரின் உடலில் இருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட துப்பாக்கி தோட்டாக்கள் சந்தேக நபரினால் பயன்படுத்தப்பட்டிருப்பதாக மன்று திருப்தியடைந்தது. அந்த வகையில் சந்தேக நபர் குற்றவாளியாக இனங்காணப்படுவதாக மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதற்கமைய அவருக்கு மரணதண்டனை வழங்கப்பட்டது.

வவுனியாவை சேர்ந்த நெடுமாறன் என்று அழைக்கப்படும் சிவநாதன் பிரேமநாத் என்ற நபருக்கே இவ்வாறு மரணதண்டனை வழங்கப்பட்டுள்ளது. சம்பவம் இடம்பெற்ற காலப்பகுதியில் குறித்த நபர் தமிழ் மக்கள் விடுதலை கழகத்தின் (புளொட்) வவுனியா வேப்பங்குளம் முகாமுக்கு பொறுப்பாக செயற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts