ஜனாதிபதியின் தொழிலாளர் தின வாழ்த்துச் செய்தி

உழைக்கும் மக்களே, நாட்டின் ஒட்டு மொத்த பொருளாதார செயல்முறையிலும் வலுவான செல்வாக்கை செலுத்தக்கூடிய சமூக சக்தியாக உள்ளனர். வரலாறு நெடுகிலும் நாம் எதிர்கொண்ட மற்றும் வெற்றிகொண்ட சவால்கள் ஏராளம். அந்த ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நாட்டை வெற்றிப் பாதைக்கு இட்டுச் செல்வதற்கு உழைக்கும் மக்கள் சிறப்பான பங்களிப்பை வழங்கியுள்ளனர்.

கடந்த ஆண்டு மே தினத்தை கொண்டாடும் நேரத்தில், நாடு மிக மோசமான பொருளாதார வீழ்ச்சியில் இருந்ததால், அனைவரும் கடுமையான சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. அந்த சவாலான காலங்களில் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதற்கான கடினமான ஆரம்ப நடவடிக்கைகளுக்காக, பொறுமையுடனும் தைரியத்துடனும் காத்திருந்த அனைத்து உழைக்கும் மக்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

முன்னெப்போதும் இல்லாத வகையில் இலங்கையின் உழைக்கும் மக்களின் பெருமையை உலகுக்குக் காட்டக் கூடிய ஒரு சந்தர்ப்பமாக இது இருப்பதோடு, இந்த இக்கட்டான நேரத்தில் குறுகிய அரசியல் நலன்களுக்கு இரையாகாமல் நாட்டை முதன்மைப்படுத்தி செயற்படுமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்.

தொழிலாளர் உரிமைகளைப் பாதுகாக்க நாங்கள் எப்போதும் செயற்பட்டு வருவதோடு, அவர்களின் உரிமைகள் மற்றும் சலுகைகளை வென்றெடுப்பதன் மூலம், உழைப்புக்கு சரியான மதிப்புக் கிடைக்கும் சிறந்த எதிர்காலத்தை உருவாக்குவதே இன்றைய நாளின் எமது எதிர்பார்ப்பாகும்.

ஊழியர் சேமலாப நிதி தொடர்பில் தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்த சில தரப்பினர் முயற்சித்தாலும் உழைக்கும் மக்களுக்காக ஏற்படுத்தப்பட்டுள்ள ஊழியர் சேமலாப நிதியத்திற்கு எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்த இடமளிக்கப்படமாட்டாது என்பதையும் வலியுறுத்த விரும்புகின்றேன்.

2048 ஆம் ஆண்டளவில் முன்னேற்றமடைந்த இலங்கையைக் கட்டியெழுப்புவதற்கான புதிய சீர்திருத்தப் பாதையில் ஒற்றுமையுடன் கைகோர்க்குமாறு அனைத்து உழைக்கும் மக்களையும் நான் அழைப்பதோடு, அவர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும் அர்த்தமுள்ள சர்வதேச தொழிலாளர் தினத்திற்காக அவர்களை வாழ்த்துகிறேன்.

——

உலகெங்கிலும் உள்ள உழைக்கும் மக்கள் தங்கள் பாரம்பரியங்கள், வரலாறுகள் மற்றும் சாதனைகளை ஒவ்வொரு ஆண்டும் மே 1 ஆந் திகதி அன்று கொண்டாடுகிறார்கள்.

1886 ஆம் ஆண்டு எட்டு மணி நேர வேலை நாள் கோரி தங்கள் இன்னுயிரை தியாகம் செய்த சிகாகோ நகர தொழிலாளர்களின் வரலாற்றுப் போராட்டத்தின் நினைவாக சர்வதேச தொழிலாளர் தினம் கொண்டாடப்படுவதோடு, அந்த வரலாற்று சிறப்புமிக்க நாளை இலங்கை உழைக்கும் மக்களும் நினைவுகூருகிறார்கள்.

ஒரு நாடாக நாம் பல கடுமையான நெருக்கடிகளை எதிர்நோக்கி வரும் சூழ்நிலையில், நமது நாட்டு உழைக்கும் மக்களும் உலகத் தொழிலாளர் தினத்தைக் கொண்டாட வேண்டியுள்ளதோடு, பல ஆண்டு கால தூரநோக்கற்ற ஆட்சியால் ஏற்பட்ட தன்னிச்சையான போக்கின் விளைவே இதுவாகும்.

நாடு எதிர்கொண்டுள்ள பாரதூரமான பொருளாதார நெருக்கடியை தேசிய வளங்களை விற்று மூடிமறைக்கும் சிறுபிள்ளைத்தனமான, சாத்தியமற்ற, நிலைபேறற்ற தீர்வைக் கையாள்வதில் தற்போதைய அரசாங்கம் ஈடுபட்டுள்ளதோடு, நாடு தனது சகல தேசிய வளங்களையும் இழந்த பாலைவன நிலத்தை மட்டுமே இதனால் மீதப்படுத்தும்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அவர்கள் ஆட்சியைப் பொறுப்பேற்றதன் மூலம் எமது நாடு வரலாற்று ரீதியிலான பின்னடைவைச் சந்தித்ததோடு, தற்போதைய நிர்வாகத்தின் மூலம், அந்த தோல்வியுற்ற பயணம் மிகவும் வெற்றிகரமாக முன்னோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது.

அதேசமயம் சீர்செய்யப்படுவதாக காண்பிக்கும் உண்மை நிலை கூறுவதை விட பயங்கரமானது என்பதோடு, பாரியதொரு ஆபத்து நம் முன்னே தோன்றியவாறுள்ளது.

மக்களின் வாழ்க்கை நாளுக்கு நாள் கடுமையான படுகுழியில் விழுந்து கொண்டிருப்பதோடு, ஏராளமானோர் வேலை இழந்துள்ளனர். வேலையின் கண்ணியத்தை முற்றிலுமாக ஒழித்து அவர்களை அவமதிக்கும் நிலையை அரசாங்கம் எட்டியுள்ளது. பல ஆண்டுகளாக சம்பள அதிகரிப்புகள் மேற்கொள்ளப்படவில்லை என்பதோடு அரசியல் பழிவாங்கல்கள் சக்திவாய்ந்ததொரு அடக்குமுறை சூழ்நிலையாக வளர்ந்துள்ளது.

நாட்டின் கல்வி மற்றும் சுகாதாரத்துக்கான செலவினங்கள் 40% ஆல் குறைக்கப்பட்டுள்ளமை மிகவும் துரதிஷ்டமாகும். 85% மக்கள் கடன் வாங்குவது, கல்வி மற்றும் சுகாதாரத்திற்கான செலவினங்களைக் குறைப்பது, சேமிப்புச் செலவுகள் என்றும், சுமார் 68% மக்கள் உண்ணும் உணவின் அளவைக் குறைத்தல், உணவின் எண்ணிக்கை மற்றும் உணவு வேளைகளை குறைத்தல் போன்ற துயரங்களையும் சந்தித்து வருகின்றனர்.

சனத்தொகையில் 14.3% பேர் வறுமைக் கோட்டிற்குக் கீழே வாழ்கின்ற நிலையில், பொருளாதார நெருக்கடியின் அழுத்தம் மிகவும் கடுமையானதாக இருக்கும் என மத்திய வங்கி கணிப்புகள் எதிர்வு கூறியுள்ளன.

இவ்வாறான சூழ்நிலையில்தான் நமது நாடு தொழிலாளர் தினத்தைக் கொண்டாடுகிறது!

எல்லா எதிர்பார்புகளும் தொலைந்து, புன்னகைக்குப் பதிலாகக் கண்ணீரும், ஜனநாயகத்திற்குப் பதிலாக அச்சுறுத்தலும், அடக்குமுறையும் மக்கள் மீது அரசாங்கம் திணித்த வரும் சூழ்நிலையில்தான் தொழிலாளர் தினம் கொண்டாடப்படுவதோடு, இந்நிலையை மாற்றி, மனித சுதந்திரத்தையும், நாட்டின் அபிவிருத்தியையும் நிலைநிறுத்த, நிலைபேறான வேலைத்திட்டம் கொண்ட குழுவினால் மட்டுமே முடியும் என்பது இன்று நன்றாகவே நிரூபணமாகியுள்ளது.

தோல்வியுற்ற முதலாளித்துவம் அல்லது காலாவதியான சோசலிசத்தில் இருந்து ஒரு நாட்டை கட்டியெழுப்ப முடியாது என்பது யதார்த்தமாவதோடு, முற்போக்குத் தேசியவாதத்தை அடிப்படையாகக் கொண்ட நடுநிலையானதொரு பாதையால் மட்டுமே இதை மேற்கொள்ள முடியும்.

பிரிவினைவாதம், இனவாதம், பயங்கரவாதம் இல்லாத உன்னத நாடாக நமது நாட்டை கட்டியெழுப்பும் சவாலை ஏற்றுக்கொள்ளும் ஒரே சக்தி ஐக்கிய மக்கள் சக்தி மட்டுமே என்பதோடு, இதன் நம்பகமான வேலைத்திட்டத்துடன் ஒரு வலுவான முகாமை கட்டியெழுப்ப ஒன்றிணைவோம் என தேசத்தின் சகல உழைக்கும் மக்களையும் மரியாதையுடனும் அபிமானத்துடனும் அழைக்கிறோம்!

—–

“மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களை முதலாளிகள் என்ற பண முதலைகளும், உழைப்பை சுரண்டிய அதிகார வர்க்கமும் அடக்கி ஆண்ட யுகத்தை முடிவுக்கு கொண்டு வந்தது போல, அவர்கள் உழைப்பால் உயர்ந்து உச்சம் தொடுவதற்கு என்றும் நாம் பக்கபலமாக இருப்போம். உழைக்கும் வர்க்கத்தின் உரிமைக்குரலாக ஓங்கி ஒலிப்போம்” என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

அவர் விடுத்துள்ள மே தின வாழ்த்து செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“உலகிலுள்ள தொழிலாளர்கள் ஓரணியில் திரண்டு உரிமைகளுக்காக போராடி வெற்றிகண்ட – உயரிய வெற்றி திருநாளாகவே மே தினம் நினைவு கூரப்படுகின்றது. தங்களின் உயிரை தியாகம் செய்தே தொழிலாளர் வர்க்கத்துக்கு அன்று உரிமைகள் வென்று கொடுக்கப்பட்டன. தொழிலாளர்கள் உழைப்பால் உயர்ந்து நிற்க, தமது உயிரை தியாகம் செய்த அத்தனை ஊழிய படையினருக்கும் எங்கள் வீர வணக்கம். தொழில்சார் உரிமைகளை வென்றெடுப்பதற்காக எமது மலையக மண்ணில் உயிர் தியாகம் செய்த மலையக தொழிற்சங்க தியாகிகளையும் இந்த உன்னதமான தருணத்தில் நெஞ்சில் இருத்தி நினைவுகூருகின்றேன்.

உழைக்கும் வர்க்கத்தினரின் துயர் துடைக்க இலங்கை தொழிலாளர்கள் காங்கிரஸ் அன்று முதல் இன்று வரை எல்லா வழிகளிலும் போராடியுள்ளது. இனியும் அதே வழியில் தான் பயணிக்கும். அதுமட்டுமல்ல மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களும் உழைப்பால் உயர்ந்து நிற்பதற்கான சகலவித ஏற்பாடுகளையும் செய்வதற்கு இனிவரும் நாட்களில் முன்னுரிமையும், முக்கியத்துவமும் வழங்கப்படும்.

இலங்கையில் உள்ள தொழிலாளர்களில் பெருந்தோட்ட தொழிலாளர்கள் வேறுவிதத்தில் நடத்தப்படும் நிலை காணப்படுகின்றது. இந்நிலைமை மாற வேண்டும். அவர்களும் சமமாக நடத்தப்படும் வகையில் தொழில்சார் சட்டங்கள் மறுசீரமைக்கப்பட வேண்டும். அதற்காக நாடாளுமன்றத்தில் எமது குரல் ஓங்கி ஒலிக்கும்.

அதேபோல புலம்பெயர் தொழிலாளர்களாக உள்ளோரிலும் எமது மலையக சொந்தங்களின் பங்களிப்பு ஏராளம். அவர்கள் குறித்தும் கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டும். ஆடை தொழிற்சாலை, கட்டுமான தொழில் உள்ளிட்டவற்றில் பணியாற்றும் தொழிலாளர்களின் தொழில்சார் பாதுகாப்பும் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.

உழைக்கும் வர்த்தகத்தின் துயர் துடைக்கவும் உரிமைகளை வென்றெடுக்கவும் காங்கிரஸ் என்றும் உறுதுணையாக நிற்கும். நாட்டையும், வீட்டையும் தமது உழைப்பால் உயர வைக்கும் பாட்டாளி சொந்தங்களுக்கு மே தின நல்வாழ்த்துகள். என்றும் நாங்கள் உங்களுடன் என்றார்.

Related posts