சின்னத்தம்பி படம் குறித்து குஷ்பு நெகிழ்ச்சி

பி.வாசு இயக்கத்தில் பிரபு, குஷ்பு ஜோடியாக நடித்த சின்னத்தம்பி படம் 1991-ல் வெளியாகி பெரிய வெற்றி பெற்றது. இதில் மனோரமா, ராதாரவி உள்ளிட்ட மேலும் பலர் நடித்து இருந்தனர்.

இளையராஜா இசையில் படத்தில் இடம்பெற்ற தூளியிலே ஆட வந்த, போவோமா ஊர்கோலம், குயில பிடிச்சி கூண்டில் அடைச்சி, நீ எங்கே என் அன்பே, அரச்ச சந்தனம், அட உச்சம் தல ஆகிய பாடல்கள் பட்டி தொட்டியெங்கும் ஒலித்தன.

இந்த படத்தின் இரண்டாம் பாகம் எடுக்க வேண்டும் என்று ரசிகர்கள் தொடர்ந்து வற்புறுத்தி வருகிறார்கள். இந்த நிலையில் தற்போது சின்னத்தம்பி படம் வெளியாகி 32 ஆண்டுகள் ஆனதையொட்டி குஷ்பு டுவிட்டரில் வெளியிட்டுள்ள நெகிழ்ச்சியான பதிவில், ”சின்னத்தம்பி திரைப்படம் வெளியாகி 32 ஆண்டுகளாகி விட்டது என்பதை நம்ப முடியவில்லை. சின்னத்தம்பி படம் வெளியானபோது பெரிய புயலை கிளப்பியது.

இந்த படம் வெளியான பிறகு என் மீது அனைவரும் செலுத்திய அன்பை என்றும் மறக்க மாட்டேன். இயக்குனர் வாசு மற்றும் பிரபுவுக்கு என் இதயபூர்வமான நன்றி. ‘நந்தினி’ எப்போதும் உங்கள் இதயத்தில் இருப்பாள்.

அன்பு காட்டிய அனைவருக்கும் மீண்டும் நன்றி” என்று குறிப்பிட்டு உள்ளார். வாசு, பிரபு ஆகியோருடன் இருக்கும் சின்னத்தம்பி பட போஸ்டரையும் பகிர்ந்துள்ளார்.

Related posts