தனுஷின் தந்தை என உரிமை கோரிவந்த முதியவர்

தனுஷின் தந்தை என உரிமை கோரியவர், திடீரென்று மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

மதுரை மேலூரை சேர்ந்த ஆர்.கதிரேசன்(70) என்பவர், தனுஷின் தந்தை என உரிமைக்கோரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு விசாரணை தற்போது வரை நடந்து வருகிறது. இது தொடர்பான வழக்கு விசாரணையில் நடிகர் தனுஷ் நேரடியாக ஆஜரானார். அதனால், இந்த வழக்கு விசாரணை தற்போது வரை பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கதிரேசன் தற்போது உடல்நலகுறைவால் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். கதிரேசன் உடல்நிலை மோசமாக உள்ளதாகவும், வழக்கின் விசாரணைக்காக அவரது மரபணுவை (டி.என்.ஏ) சேகரித்து பாதுகாக்க வேண்டும் எனக்கூறி அவரது மனைவி மீனாட்சி மற்றும் வழக்கறிஞர் டைட்டஸ் ஆகியோர் மருத்துவமனை டீன் ரத்தினவேலிடம் கோரிக்கை மனு அளித்தார்.

பின்னர் வழக்கறிஞர் டைட்டஸ் அளித்த பேட்டியில், “கதிரேசனின் உடல்நிலை மோசமாக உள்ளது. அவரின் வழக்கு உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. கதிரேசன் உயிருக்கு ஆபத்து ஏற்பட கூடும் என்பதால், அவரது டி.என்.ஏ. வை எடுத்து பராமரிக்க வேண்டும் என மனு அளித்து உள்ளோம்.

ஏற்கனவே வழக்கு விசாரணையின் போது நடிகர் தனுஷ் அவரது அங்க அடையாளத்தை லேசர் மூலம் அழித்து இருந்தார். பள்ளிக்கூட சான்றிதழ், பிறப்பு சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்களை தவறாக தாக்கல் செய்துள்ளார்.

எனவே, தனுஷின் பெற்றோர் கதிரேசன் – மீனாட்சி ஆகியோர்தான் என்பதை ஆவணங்கள் உறுதி செய்கின்றது. எங்கள் மீது 10 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு வழக்கு பதிவு செய்வோம் என்று சொன்ன தனுஷ் இதுவரை வழக்கு பதிவு செய்யவில்லை. தனுஷ் உண்மையை மறைக்க பார்க்கிறார். இது ஒரு கதிரேசனின் பிரச்சனை அல்ல. இப்படி எத்தனையோ பெற்றோர் பிள்ளைகளால் புறக்கணிக்கப்பட்டு உள்ளனர்’’ என்று குற்றம்சாட்டினார்.

Related posts