அந்தோ பரிசு வெடித்து புதுமாப்பிள்ளை பலி

சத்தீஷ்காரின் கபீர்தம் மாவட்டத்தில் சமரி கிராமத்தில் ரெங்காகார் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியை சேர்ந்தவர் ஹேமேந்திரா மேராவி (வயது 22). கடந்த 1-ந்தேதி அவருக்கு திருமணம் நடந்தது.
இதன்பின்பு, திருமணத்தின்போது கிடைத்த பரிசு பொருட்களை ஹேமேந்திராவும், அவரது குடும்ப உறுப்பினர்களும் அவரது வீட்டில் வைத்து நேற்று பிரித்து பார்த்து உள்ளனர். இதில், ஹோம் தியேட்டர் மியூசிக் சிஸ்டம் ஒன்றும் இருந்து உள்ளது.
அதனை ஆவலுடன் பிரித்த அவர், மின்சார போர்டில் வயரை இணைத்து விட்டு அதனை இயக்கி உள்ளார். ஆனால், பாடல் பாடுவதற்கு பதிலாக திடீரென அது வெடித்து சிதறி உள்ளது. இதில், அந்த அறையின் சுவர்கள் மற்றும் மேற்கூரை இடிந்து விழும் அளவுக்கு பாதிப்பு ஏற்பட்டது.
சம்பவ இடத்திலேயே புதுமாப்பிள்ளை பலியானார். அவரது சகோதரர் ராஜ்குமார் (வயது 30), ஒன்றரை வயது சிறுவன் உள்பட 4 பேர் பலத்த காயமடைந்தனர். அவர்கள் உடனடியாக கவ்ராதா மாவட்ட மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர்.
எனினும், ஹேமேந்திராவின் சகோதரர் உயிரிழந்து விட்டார். மற்றவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. போலீசார் மற்றும் தடய அறிவியல் குழு சம்பவ பகுதிக்கு சென்று விசாரணை நடத்தி வருகிறது. சரியான காரணம் என்னவென எதுவும் தெரியவில்லை.
அந்த அறையில் வெடிப்பதற்கான வேறு பொருள் எதுவும் இல்லை. இந்த இசை உபகரணம் மட்டுமே அந்த அறையில் இருந்து, வெடித்து உள்ளது என ரெங்காகார் காவல் நிலைய உயரதிகாரி துர்கேஷ் ராவ்தே கூறியுள்ளார். தொடர்ந்து தீவிர விசாரணை நடந்து வருகிறது.

Related posts