இன்றைய பாடல்களை சாடிய எல்.ஆர்.ஈஸ்வரி

பிரபல சினிமா பின்னணி பாடகி எல்.ஆர்.ஈஸ்வரி. தமிழ், தெலுங்கு, மலையாள மொழிகளில் ஆயிரக்கணக்கான பாடல்களை பாடி இருக்கிறார். இந்த நிலையில் சினிமா வாழ்க்கை மற்றும் இப்போதைய பாடல்கள் குறித்து எல்.ஆர்.ஈஸ்வரி மனம் திறந்து பேசி உள்ளார்.

எல்.ஆர்.ஈஸ்வரி அளித்துள்ள பேட்டியில், “ஆரம்பத்தில் கோரஸ் பாடல்கள் பாடித்தான் எனது சினிமா வாழ்க்கை ஆரம்பம் ஆனது. சுவர்ண சுந்தரி படத்தில் பிலுவகுரா என்ற பாடலுக்கு கோரஸ் பாட சென்றேன்.

என் குரல் சரியாக இல்லை என்று வெளியேற்றி விட்டார்கள். நான் அழுதேன். ஆனால் நான் பெரிய பாடகியான பிறகு அதே ரெக்கார்டிஸ்ட் எனது பாடலை பதிவு செய்தார்.

இப்போது வரும் பாடல்கள் எனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை.

சமீபத்தில் ஓ சொல்றியா மாமா பாடலை கேட்டேன்.அதெல்லாம் ஒரு பாடலா? ஆரம்பத்தில் இருந்து கடைசி வரை ஒரே மாதிரி இருந்தது. மியூசிக் டைரக்டர் இதையெல்லாம் கவனிக்க வேண்டும்.

பாடகர்களுக்கு என்ன தெரியும். சொல்லியபடி பாடி விடுகிறார்கள். அதே பாடல் என்னிடம் வந்திருந்தால் அந்த கலரே வேறு. நாங்கள் எவ்வளவோ சின்சியராக பணி செய்தோம். அதனால்தான் அப்போது நாங்கள் பாடிய பாடல்கள் இப்போதும்கூட நிலைத்திருக்கின்றன.

அப்போது ஒரு படம் 100 நாட்கள், 250 நாட்கள் என ஓடின. இப்போது 10 நாட்கள் ஓடினாலே பெருமை என்று சொல்கிறார்கள்” என்றார்.

Related posts