3 நாளில் ரூ.300 கோடி… வசூல்

நடிகர் ஷாருக் கான் நடிப்பில் கடைசியாக 2018-ம் ஆண்டு ஜீரோ படம் வெளியானது. அதற்கு நான்கு ஆண்டுகள் கழித்து ஷாருக் கான் நடிப்பில் உருவாகியுள்ள பதான் படம் பல தடைகளை எதிர்கொண்டது.

இறுதியில் அந்த போராட்டத்தில் வெற்றி பெற்று, கடந்த 25-ந்தேதி உலகம் முழுவதும் பெரும் எதிர்பார்ப்புடன் வெளியானது. ஆக்சன், திரில்லர், நகைச்சுவை கலந்த அதிரடி திரைப்படம் பதான்.

சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில், யாஷ் ராஜ் பிலிம்ஸ் சார்பில் தயாரிக்கப்பட்டு உள்ளது. படத்தில் ஷாருக் கான், தீபிகா படுகோனேவின் கலக்கல் கெமிஸ்ட்ரி, ஜான் ஆபிரஹாமின் அதிரடி நடிப்பு, சல்மான் கானின் 10 நிமிட சிறப்பு தோற்றம் என ரசிகர்களுக்கு திரை விருந்து அளித்துள்ளது.

படத்திற்கு விஷால்-சேகர் இசையூட்டி உள்ளனர்.

இந்தியாவில் பெருநகரங்களான டெல்லி, மும்பை உள்பட நாடு முழுவதும் 5 ஆயிரம் தியேட்டர்களில் படம் வெளியிடப்பட்டது. 100-க்கும் மேற்பட்ட நாடுகளில் 2 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் இந்த திரைப்படம் வெளியாகி உள்ளது.

இதில் புதிய சாதனையாக, படத்தின் வெற்றியால், கூடுதலாக 300 தியேட்டர்களை பெற்றது பதான். இதனால், உலக அளவில் மொத்தம் 8,500 திரையரங்குகளில் பதான் திரைப்படம் வெளிவந்து உள்ளது என வர்த்தக நிபுணரான தரன் ஆதார்ஷ் கூறினார்.

தவிர, தமிழ், தெலுங்கிலும் டப்பிங் செய்யப்பட்டு படம் வெளிவந்து உள்ளது. ஒவ்வொரு காட்சியும் ரசிகர்களை சீட்டின் நுனியில் அமர வைக்கிறது. பாடல்களுடன் ஒட்டுமொத்த கதைக்களமும் நன்றாக இருக்கின்றன. சில திருப்பங்களும் ஈர்க்கும் வகையில் உள்ளன என விமர்சனங்கள் வெளிவந்து உள்ளன.

படம் திரையிடப்பட்ட முதல் நாளில் ரூ.55 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது. இந்தி திரையுலகில் இதுவரை இல்லாத வகையில் முதன்முறையாக தொடக்க நாளில் வசூல் வேட்டையை நடத்திய பதான் படம், டப்பிங் செய்யப்பட்டு வெளியிடப்பட்ட இடங்களில் மொத்தம் ரூ.2 கோடி ஈட்டியுள்ளது என தயாரிப்பாளர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர் விடுமுறை அல்லாத நாளில் வெளிவந்து முதல் நாளிலேயே அதிக வசூல் ஈட்டிய பெருமையையும், இந்தியாவில் அதிக திரையரங்குகளில் திரையிடப்பட்ட படம் என்ற சாதனையையும் பதான் பெற்றுள்ளது.

ஷாருக் கான், தீபிகா படுகோனே மற்றும் ஜான் ஆபிரஹாமின் திரை வாழ்க்கையிலும் அதிக வசூல் ஈடடிய படம் என்ற சாதனையை பதான் படைத்து உள்ளது. இந்தியா மீது அதிரடியான தாக்குதல் நடத்த ஜிம் என்பவர் முனைகிறார்.

இந்த வேடத்தில் ஜான் ஆபிரகாம் வருகிறார். அவரது தலைமையிலான பயங்கரவாத குழுவை உளவு அமைப்பு அதிகாரியான பதான் (ஷாருக் கான்) எப்படி வீழ்த்துகிறார் என்று, நகைச்சுவை, சஸ்பென்ஸ், அதிரடி காட்சிகள், திரில்லிங் என பல பரிமாணங்களுடன் படம் நகர்த்தி செல்கிறது.

மற்றொரு உளவு அதிகாரியாக டைகர் வேடத்தில் சல்மான் கான் வருகிறார். இந்நிலையில், பதான் படம் இந்தியாவில் 3 நாளில் ரூ.150 கோடி வசூலித்து உள்ளது. உலகம் முழுவதும் ரூ.300 கோடி வசூல் வேட்டை நடத்தி உள்ளது.

வர்த்தக நிபுணரான ரமேஷ் பாலா என்பவர் இதனை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து உள்ளார். 3-வது நாளில் மட்டுமே ரூ.34 முதல் ரூ.36 கோடி வசூல் செய்து உள்ளது. இதனால், மொத்த பாக்ஸ் ஆபீஸ் வசூல் ரூ.157 கோடியை எட்டியுள்ளது.

இந்திய பாக்ஸ் ஆபீசில் ரூ.150 கோடியை பதான் படம் அள்ளியுள்ளது கொண்டாட்டத்திற்கான காரணங்களில் ஒன்றாக அமைந்து உள்ளது என அவர் தெரிவித்து உள்ளார். முதல் நாளில் ரூ.57 கோடி மற்றும் 2-வது நாளில் ரூ.70.50 கோடி வசூலித்து உள்ளது.

இதுபோன்று பதான் படம் 21 சாதனைகளை படைத்து உள்ளது. இந்த வரிசையில் 2022-ம் ஆண்டு வெளிவந்த கே.சி.எப்.-சேப்டர் 2 ரூ.53.95 கோடி வசூல் செய்தது. 2019-ம் ஆண்டில் வெளிவந்த வார் திரைப்படம் ரூ.53.35 கோடியும், 2018-ம் ஆண்டில் வெளிவந்த தக்ஸ் ஆப் ஹிந்தோஸ்தான் ரூ.52.25 கோடியும் வசூலித்து இருந்தது.

Related posts