பதான் படத்திற்கு எதிர்ப்பு இல்லை

நடிகர் ஷாருக் கான், தீபிகா படுகோனே நடிப்பில் உருவான திரைப்படம் பதான். இந்த படம் இன்று திரையரங்கில் வெளியிடப்பட திட்டமிடப்பட்டது. இதனையொட்டி படத்தின் டிரைலர் மற்றும் பாடல் கடந்த டிசம்பரில் வெளியிடப்பட்டது.

அது முதற்கொண்டு, சர்ச்சை கிளம்பியது. பேஷாராம் ரங் பாடலில் நடித்துள்ள தீபிகா படுகோனே காவி நிற, பிகினி உடையில், படுகவர்ச்சியுடன் காணப்படுகிறார் என சர்ச்சை வெடித்தது.

இது இந்துமத உணர்வுகளை புண்படுத்தும் நோக்கில் உள்ளது என பல்வேறு இந்து அமைப்புகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. பாடலுக்கு தடை கோரி வழக்கும் தொடுக்கப்பட்டது. அயோத்தி சாமியார் பரமஹம்ச ஆச்சாரியா என்பவர், காவி நிறம் கொச்சைப்படுத்தப்பட்டு உள்ளது என்றும் நடிகர் ஷாருக் கானை நேரில் பார்த்தால் உயிருடன் கொளுத்தி விடுவேன் என்றும் கூறி பரபரப்பு ஏற்படுத்தினார்.

காவி நிற அவமதிப்பு செய்த பதான் படம் திரையிடும் திரையரங்குகளை எரிப்போம் என எச்சரிக்கை விடுத்தும் பேசினார். காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரி பரூக் அப்துல்லா செய்தியாளர்களிடம் பேசும்போது, காவி நிறம் இந்துக்களுக்கு உரியது மற்றும் பச்சை நிறம் என்றால் அது முஸ்லிம்களுக்கு உரிய ஒன்றா? என்ன இது? பசுக்கள் என்றால் இந்துக்களுக்கும் மற்றும் எருது என்றால் முஸ்லிம்களுக்கும் உரிய ஒன்றா? என்றும் கேள்வி எழுப்பினார்.

இந்த பட விவகாரம் பற்றி பா.ஜ.க. மந்திரி நரோட்டம் மிஷ்ரா கூறும்போது, படத்துடன், பேஷாராம் ராங் பாடலும் எதிர்ப்புக்கு உரியது. காவி மற்றும் பச்சை நிற ஆடைகள் அணிந்துள்ள விதம், பாடலின் வண்ணம், வரிகள் மற்றும் திரைப்படத்தின் பெயரே விவகாரத்திற்கு உரியது என்று கூறினார். இந்த சூழலில், குஜராத்தின் ஆமதாபாத் நகரில் வஸ்திராப்பூர் பகுதியில் பதான் பட விளம்பர நிகழ்ச்சி ஒன்று கடந்த இரு வாரங்களுக்கு முன் நடந்தது.

இதில், ஆல்பா ஒன் மாலில் நடந்த நிகழ்ச்சியின்போது, விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் ஒரு பிரிவினரான பஜ்ரங்தள அமைப்பை சேர்ந்த தொண்டர்கள் உள்ளே புகுந்து, நடிகர் ஷாருக் கான், பிற நடிகர் நடிகைகளின் புகைப்படங்கள், போஸ்டர்கள், பெரிய அளவிலான கட்-அவுட்டுகள் உள்ளிட்டவற்றை கிழித்து, வீசி எறிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த படம் திரையிடப்பட்டால், இதனை விட கடுமையான போராட்டம் நடத்தப்படும் என அந்த வணிகவளாக நிர்வாகத்தினருக்கு எச்சரிக்கை விடுத்து, அவர்கள் கோஷங்களையும் எழுப்பினர்.

இந்த காட்சிகள் வீடியோவாக பதிவு செய்யப்பட்டு வெளிவந்தன. அதற்கு இரு தினங்களுக்கு முன்பு, மத்திய பிரதேசத்தில் ஐநாக்ஸ் தியேட்டரிலும் இந்து ஜக்ரான் மஞ்ச் அமைப்பின் தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு, படம் திரையிடப்பட கூடாது என்று திரையரங்க நிர்வாகத்தினரிடம் கூறி விட்டு சென்றனர். இந்த சூழலில், அசாமில் கவுகாத்தி நகரில் பதான் படம் வெளியாக கூடிய திரையரங்குகளுக்குள் புகுந்த பஜ்ரங் தள அமைப்பினர் போஸ்டர்களை கிழித்து, எரித்து கடந்த சில நாட்களுக்கு முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதுபற்றி அசாம் முதல்-மந்திரி ஹிமந்தா பிஸ்வா சர்மாவிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு அவர், ஷாருக் கான் யார்? அவரை பற்றி எனக்கு எதுவும் தெரியாது. அவரது பதான் படம் பற்றியும் எனக்கு தெரியாது என பதிலளித்து பேசினார். இதற்கு ஷாருக் கான் ரசிகர்கள் தரப்பில் கடும் கண்டனம் தெரிவித்து, அதற்கான ஹேஷ்டேக்கும் வைரலானது. எனினும், அசாமை பற்றி, மாநில மக்கள் கவலைப்பட வேண்டும். இந்தி திரைப்படங்களை பற்றி அல்ல என்றும் முதல்-மந்திரி பிஸ்வா கூறினார்.

இந்நிலையில், அதற்கு அடுத்த நாள் அதிகாலை அசாம் முதல்-மந்திரியை தொலைபேசி வழியே தொடர்பு கொண்டு நடிகர் ஷாருக் கான் பேசியுள்ளார். இதுபற்றி தனது டுவிட்டரில் முதல்-மந்திரி பிஸ்வா வெளியிட்ட செய்தியில், பாலிவுட் நடிகர் ஷாருக் கான் என்னை இன்று அதிகாலை 2 மணியளவில் தொடர்பு கொண்டு பேசினார். அவரது படம் திரையிடப்பட்டபோது, கவுகாத்தி நகரில் நடந்த சம்பவம் பற்றி வருத்தம் தெரிவித்து பேசினார். மாநிலத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கை பராமரிப்பது அரசின் கடமை என அவருக்கு உறுதி கூறினேன் என கூறினார்.

இதுபற்றி நாங்கள் விசாரணை செய்து, அதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் இருப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வோம் என அந்த பதிவில் தெரிவித்து உள்ளார். இதுபோன்ற அடுத்தடுத்து சர்ச்சையான விசயங்கள் நடந்து வந்த சூழலில், படம் திரைக்கு வரும்போது என்ன நடக்க போகிறது என காண ரசிகர்கள் காத்திருந்தனர். இந்த நிலையில், பதான் படத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்க போவதில்லை என விஷ்வ இந்து பரிஷத் (வி.எச்.பி.) அமைப்பினர் தெரிவித்து உள்ளனர். இதுபற்றி அமைப்பின் செய்தி தொடர்பாளர் ஸ்ரீராஜ் நாயர் கூறும்போது, பதான் படத்தில் செய்த மாற்றங்களால் அமைப்பினர் மகிழ்ச்சியில் உள்ளனர். அதனால், போராட்டம் நடத்தும் முடிவை வாபஸ் பெற முடிவாகி உள்ளது என கூறியுள்ளார்.

அந்த அமைப்பின் உறுப்பினர்கள் கூறும்போது, நாங்கள் பதான் படத்திற்கு சென்று பார்ப்போம். ஆட்சேபனைக்கு உரிய விசயங்கள் எதுவும் உண்டா? என் கவனித்து அதன்பின்னர் முடிவு செய்வோம். தற்போது, பதான் படத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. எங்களது முந்தின எதிர்ப்புகளை கவனத்தில் கொண்டு படத்தில் மாற்றங்கள் செய்திருப்பது சரியான விசயம் என கூறியுள்ளனர்.

——

இந்த நிலையில் படத்தை பற்றிய ரசிகர்கள் தங்கள் கருத்த டுவிட்டர் மூலம் வெளியிட்டு உள்ளனர். பதான் ஒரு சிறந்த ஆக்ஷன் திரில்லர் படமாக இருப்பதாகவும், ஷாருக்கான், தீபிகா படுகோன் கெமிஸ்ட்ரி நன்றாக இருப்பதாகவும் ஜான் அப்ரஹாமின் நடிப்பு அபாரமாக இருப்பதாகவும் கூறியுள்ளனர்.

குறிப்பாக சல்மான் கானின் 10 நிமிட சிறப்பு தோற்றம் படத்தின் ஹைலைட்டான விஷயமாக அமைந்துள்ளதாம். ஒவ்வொரு காட்சியும் ரசிகர்களை சீட்டின் நுனியில் அமரவைப்பதாகவும் விமர்சனங்கள் வருகின்றன.

பாடல்களுடன் ஒட்டுமொத்த கதைக்களமும் நன்றாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.ஆக்ஷன் கலந்த படமான பதானில் நகைச்சுவை கதாபாத்திரங்களும் சில திருப்பங்களும் ஈர்க்கும். என்னதான் ஆங்காங்கே சில குறைகள் இருந்தாலும் ஒட்டுமொத்தமாக இப்படம் ரசிகர்களுக்கு ஒரு விருந்தாக அமையும் என்பதே ரசிகர்களின் கருத்தாக இருக்கின்றது. எனவே பதான் படத்தின் மூலம் ஷாருக்கான் மட்டுமல்லாமல் பாலிவுட் திரையுலகமே வெற்றிப்பாதைக்கு திரும்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக சல்மான் கானின் கேமியோ படத்தின் ஹைலைட்டான விஷயமாக அமைந்துள்ளதாம். ஒவ்வொரு காட்சியும் ரசிகர்களை சீட்டின் நுனியில் அமரவைப்பதாகவும் விமர்சனங்கள் வருகின்றன. கதையை பழைய காலாவதியான கதை என்று மற்றொரு நெட்டிசன்கூறி உள்ளார்.

ஷாருக்கானிடம் இருந்து பார்வையாளர்கள் விரும்பிய பொழுதுபோக்கும் நகைச்சுவையும் காணாமல் போய்விட்டதாகவும், மற்றொரு தோல்வி நிகழும் என்றும் நெட்டிசன் கூறினார். சில நெட்டிசன்கள் விஎப்எக்ஸ் மிகவும் மோசமாக இருப்பதாக கருத்து தெரிவிக்கின்றனர்.

தீவிரவாதியாக நடித்த ஜான் ஆபிரகாம் (அன்சாரி) மற்றும் தீபிகா (திஷா) ஆகியோர் கதாபாத்திரங்கள் கார்ட்டூன் கதாபாத்திரங்களை போன்று இருப்பதாக கருத்து தெரிவித்து உள்ளனர். வர்த்தக நிபுணர் சுமித் கதல் இந்த படத்திற்கு 4.5 ரேட்டிங் கொடுத்துள்ளார்.

Related posts