ரொனால்டோ ரூ.1,775 கோடிக்கு ஒப்பந்தம்

போர்ச்சுக்கல் கால்பந்து அணியின் நட்சத்திர வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோவை ரூ.1,775 கோடிக்கு ஒப்பந்தம் செய்துள்ளது சவுதி அரேபியாவில் உள்ள அல் நசர் கிளப். 37 வயதான ரொனால்டோ இந்த கிளப்புக்காக 2025-ம் ஆண்டு ஜூன் மாதம் வரை ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

இதுதொடர்பாக ரொனால்டோ கூறும்போது, “சவுதி அரேபியாவில் புதிய கால்பந்து லீக்கில் விளையாட உள்ளேன். அல் நசர் கிளப்பின்தொலைநோக்கு பார்வையும், செயலும் மிகுந்த ஊக்கம் அளிக்கிறது. இந்த கிளப்பில் இணைவதில் மகிழ்ச்சி அடைகிறேன். அணி மிகப்பெரிய வெற்றியை அடைய உதவ முடியும்” என்றார்.

அல் நசர் கிளப் சவுதி அரேபியன்லீக் பட்டத்தை 9 முறை வென்றுள்ளது. கடைசியாக அந்த அணி 2019-ம்ஆண்டு கோப்பையை வென்றிருந்தது.

அல் நசர் கிளப் வெளியிட்டுள்ள ட்விட்டர் பிதிவில், “கால்பந்து உலகில் இந்த ஒப்பந்தம் வரலாற்றை உருவாக்கும்.

மேலும் இந்த ஒப்பந்தம் எங்களது கிளப்பை இன்னும் பெரிய வெற்றியை அடைய ஊக்குவிப்பது மட்டும் அல்லாமல் எங்கள் லீக், எங்கள் நாடு, எங்கள் எதிர்கால தலைமுறையினர் சாதிப்பதற்கான உந்து சக்தியை தரும்.

கிறிஸ்டியானோ ரொனால்டோவை எங்கள் கிளப்பிற்கு வரவேற்கிறோம்” எனத் தெரிவித்துள்ளது.

கிறிஸ்டியானோ ரொனால்டோ கடைசியாக இங்கிலாந்தில் உள்ள மான்செஸ்டர் யுனைட்டெடு கிளப்பில் விளையாடி வந்தார். அணி நிர்வாகம், பயிற்சியாளருடன் ஏற்பட்ட மோதல் காரணமாக அந்த கிளப்பில் இருந்து விலகியிருந்தார்.

5-வது முறையாக உலகக் கோப்பை கால்பந்து தொடரில் ரொனால்டோ பங்கேற்ற போதிலும் அணிக்காக கோப்பையை வென்று கொடுக்க முடியாமல் போனது. இம்முறை அவர், கால் இறுதிக்கு முந்தைய சுற்றிலும், கால் இறுதி ஆட்டத்திலும் மாற்று வீரராக களமிறக்கப்பட்டார். இதனால் அவர், கடும் அதிருப்தியில் இருந்தார். இதே நிலைதான் அவருக்கு மான்செஸ்டர் அணியிலும் இருந்தது.

ஐரோப்பிய லீக் போட்டிகளில் வெகுகாலம் ஆதிக்கம் செலுத்திய ரொனால்டா தற்போது முதன்முறையாக ஆசிய கிளப்பில் இணைந்துள்ளார். 2003 முதல் 2009-ம் ஆண்டு வரை மான்செஸ்டர் யுனைட்டெடு அணியிலும் 2009 முதல் 2018-ம் ஆண்டு வரை ரியல்மாட்ரீட் அணியிலும் 2018 முதல்2021 வரை ஜுவென்டஸ் அணியிலும் விளையாடியிருந்தார் ரொனால்டா.

இதன் பின்னர் 2021-ம்ஆண்டு மீண்டும் மான்செஸ்டர் யுனைட்டெடு அணிக்கு திரும்பினார். ஆனால் அங்கு ஏற்பட்ட மனக்சப்பு காரணமாக வெளியேறி தற்போது அல் நசர் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

ரொனால்டோ நீண்ட காலமாகவே கால்பந்து உலகில் அதிக சம்பளம் வாங்கும் வீரர்களில் ஒருவராக இருந்து வருகிறார். மான்செஸ்டர் அணியுடன் அவருக்கு மோதல் ஏற்பட்டதை தொடர்ந்து செல்சியா, பேயர்ன் முனிச், நபோலி அணிகளுடன் ரொனால்டோ தொடர்பில் இருந்தார்.

இதனால் இந்த அணிகளில் ஏதேனும் ஒன்றில் அவர், இணையக்கூடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பெரும் தொகைக்கு சவுதி அரேபியாவின்அல் நசர் கிளப்பில் தற்போது இணைந்துள்ளார்.

Related posts