எண்ணங்களைப் புதுப்பித்துக் கொள்ள சிறந்ததொரு சந்தர்ப்பம்

புத்துணர்ச்சியுடன் புதிய வருடம் ஒன்று பிறக்கிறது. புதிய சிந்தனைகள், திடமான நோக்கு என்பவற்றுடன் எண்ணங்களைப் புதுப்பித்துக் கொள்ள இதுவொரு சிறந்த சந்தர்ப்பமாகும்.

எண்ணிலடங்கா சிரமங்கள், நிச்சயமற்ற சூழ்நிலைகள், ஏமாற்றங்களுடனான ஒரு வருடத்தை முடித்துக்கொண்டு, நாம் 2023 எனும் புதிய ஆண்டுக்குள் காலடி எடுத்து வைக்கின்றோம்.

முன்னெப்போதும் இல்லாதவாறு நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார வீழ்ச்சிக்கு மத்தியில் நம் அனைவர் மீதும் சுமத்தப்பட்டுள்ள பாரிய சுமை மற்றும் நம்மில் பெரும்பாலானோர் சந்தித்த பின்னடைவு ஆகியவற்றை நான் நன்கு அறிவேன். எனினும், நாம் ஏற்கனவே நெருக்கடியான நிலையைக் கடந்துவிட்டதாக கருதுகின்றேன். 2023 புதிய ஆண்டு நாட்டின் பொருளாதாரத்தில் ஒரு புதிய திருப்புமுனையைக் குறிக்கும் ஒரு தீர்க்கமான ஆண்டாக இருக்கும்.

பிரித்தானிய காலனித்துவத்திலிருந்து இலங்கை சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைகின்றன. எனினும் பிரித்தானிய காலனித்துவத்திலிருந்து விடுதலையடைந்த ஏனைய நாடுகள் அடைந்துள்ள முன்னேற்றத்தை நாம் இன்னும் அடையத் தவறிவிட்டோம். நாட்டில் உள்ள பெரும்பான்மையான இளைஞர்கள் தற்போதுள்ள அரசியல் முறைமையில் மாற்றம் வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர். அக்கோரிக்கையைப் புறக்கணிக்க முடியாது. எதிர்வரும் தசாப்தத்திற்குள் வளமான இலங்கையை கட்டியெழுப்ப உத்தேசித்துள்ள சமூக, பொருளாதார மற்றும் அரசியல் சீர்திருத்தங்களை நாம் அவசரமாக நடைமுறைப்படுத்த வேண்டும்.

இவ்வேலைத்திட்டத்தில் நாட்டை முன்னிலைப்படுத்தி, அர்ப்பணிப்புடன் செயற்படுபவர்களுக்கும் நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதற்காக எடுக்கப்பட்டு வரும் தீர்க்கமான ஆரம்ப நடவடிக்கைகளுக்காக பொறுமையுடனும் தைரியத்துடனும் காத்திருந்த அனைத்து இலங்கை மக்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

புதிய நம்பிக்கைகளுடன் நாட்டிற்காக ஆரம்பிக்கப்பட்ட வேலைத்திட்டத்தை வெற்றிகரமாக நிறைவுசெய்து, வளமான இலங்கைக்கான கதவுகளைத் திறக்கும் வெற்றிகரமான ஆண்டாக இந்தப் புத்தாண்டு அமைய வேண்டுமென பிரார்த்திப்பதுடன் அனைவருக்கும் எனது புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ரணில் விக்ரமசிங்க
ஜனாதிபதி
இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசு

——–

புத்தாண்டில் மகிழ்ச்சியுடனும், நம்பிக்கையுடனும், குதூகலத்துடனும் நுழைகிறோம். 2022 ஆம் ஆண்டு நமது பெரும்பாலான மக்களுக்கு கடினமாக இருந்த போதிலும், பல சவால்களுக்கு மத்தியிலும் சிறந்த நாட்டைக் கட்டியெழுப்புவதில் மிகுந்த அர்ப்பணிப்புடன் புத்தாண்டை எதிர்கொள்ள வேண்டும்.

குறிப்பாக உணவு பாதுகாப்பு மற்றும் கிராமிய பொருளாதார மறுமலர்ச்சிக்கு முன்னுரிமை அளித்து அனைத்து துறைகளிலும் வளர்ச்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறோம்.

இந்த புத்தாண்டில் வளமான தேசத்தை உருவாக்குவதன் பொருட்டு, நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்கான உத்திகளை நாம் ஒன்றிணைந்து பின்பற்றுவோம்.
தினேஷ் குணவர்தன
பிரதமர்
இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசு

——

கடந்த ஆண்டு அனுபவத்தின் அடிப்படையில், கற்றுக்கொண்ட பாடங்கள் மூலம், புதிய எதிர்பார்புடன், நாம் ஒரு புதிய பயணத்தை ஆரம்பிக்க வேண்டும். அதற்காக நாம் அனைவரும் உறுதியுடன் ஒன்றிணைய வேண்டும் என நான் நம்புகிறேன்.

மக்கள் சார் ஆட்சியையும், சவால்களை வெற்றிகொள்ளும் நாட்டையும் நாம் ஒன்றாக இணைந்து உருவாக்குவோம்.

உங்கள் அனைவருக்கும் அமைதியும், ஆரோக்கியமும், தைரியமும் நிறைந்த புத்தாண்டாக அமைய வாழ்த்துகின்றேன்.
சஜித் பிரேமதாஸ
எதிர்க்கட்சித் தலைவர்
இலங்கை

Related posts