காணாமல் போனோரது உறவுகளிடம் விசாரணை

காணாமல் போனோருக்கான அலுவலக அதிகாரிகள் நேற்று மட்டக்களப்பு, மண்முனை தென் எருவில் பற்று, களுவாஞ்சிகுடி பிரதேச செயலகத்தில் காணாமல் போனோரின் உறவினர்களிடம் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

மண்முனை தென் எருவில் பற்று, களுவாஞ்சிகுடி பிரதேச செயலக கேட்போர் கூடத்தில்

இடம்பெற்ற விசாரணையில் கொழும்பிலிருந்தும், மட்டக்களப்பைச் சேர்ந்த அதிகாரிகளும் கலந்து கொண்டு விசாரணைகளை மேற்கொண்டு முறைப்பாடுகளைப் பதிவு செய்தனர்.

இதன்போது காணாமல் போனோர் பற்றிய அலுவலகத்தினால் கடிதம் மூலம் அழைப்பு விடுக்கப்பட்டவர்கள் கலந்து கொண்டு தமது முறைப்பாடுகளைப் பதிவு செய்தனர்.

நேற்றைய (12) விசாரணைக்கு வருமாறு 75 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாகவும், மாவட்டத்தில் மொத்தமாக 450 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள செங்கலடி, மண்முனை வடக்கு ஆகிய பிரதேச செயலகங்களில் 5 நாட்கள் இவ்வாறு காணாமல் போன உறவினர்களிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு, முறைப்பாடுகள் பதிவு செய்யப்படவுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

காணாமல் போனவர்களின் உறவினர்கள் முன்வைக்கும் கோரிக்கைக்கு இணங்க அவர்களுக்குத் தேவையான உதவிகளை மேற்கொள்வதற்கு காணாமல் போனோர் பற்றிய அலுவலகம் பரிந்துரை செய்யும் எனவும் குறித்த அதிகாரி குறிப்பிட்டார்.

மேற்படி பிரதேச செயலகத்தில் 6 பிரிவுகளில் இடம்பெற்ற இம்முறைப்பாட்டுப் பதிவுகளில், அப்பகுதியைச் சேர்ந்த பலர் கலந்து கொண்டு தமது உறவுகள் காணாமல் போன விடயம் தொடர்பில் தமது முறைப்பாடுகளைப் பதிவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

Related posts