கைதட்டுபவர்கள் மட்டுமே சரியானவர்கள்

நான் எப்போதும் இந்தியப் பொருளாதார நிலவரம் குறித்து ஒரு சமநிலை பார்வையையே முன்வைக்கிறேன். சமநிலைப் பார்வையை முன்வைக்கும்போதும் விமர்சனங்கள் தேவைப்படுகிறது. ஆனால் இந்த அரசாங்கம் கைதட்டுபவர்கள் மட்டுமே சரியானவர்கள் என நினைக்கிறது. அரசாங்கம் தவறே செய்யாது என்றும் நினைக்கிறது. எல்லா அரசாங்கமும் தவறு செய்யும்” என்று ரகுராம் ராஜன் கூறியுள்ளார்.
ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் தனியார் ஆங்கில தொலைக்காட்சிக்கு பேட்டியளித்துள்ளார்.

அந்தப் பேட்டியில் அவர், “இந்தியாவில் 7 சதவீதம் வளர்ச்சி என்பது வரவேற்கத்தக்கதே. ஆனால், இந்த வளர்ச்சியில் வேலைவாய்ப்பின்மை சரிசெய்யப்படவில்லை. ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு தேவையான முதல் செயல்பாடே வேலைவாய்ப்புகள் தான். நாட்டில் அனைவருக்குமே மென்பொறியாளர் வேலையையோ அல்லது ஆலோசகர் வேலையையோ ஏற்படுத்தித் தர வேண்டிய அவசியம் இல்லை. ஆனால், கவுரமான வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தர வேண்டும். அதற்கு இங்கே குறுக்கு வழி ஏதுமில்லை. நாம் திறன்வாய்ந்த பணியாளர்களை உருவாக்க வேண்டும். திறன்வாய்ந்த தொழிலாளர்கள் உருவானால் வேலைவாய்ப்பின்மை குறையும்.

பாஜக ஆட்சியின் முதல் சில ஆண்டுகளில் தன்னிச்சையாக நிறைய முடிவுகள் இருந்தன. குறிப்பாக பணமதிப்பு நீக்க நடவடிக்கையை சுட்டிக்காட்டலாம். ஜனநாயகத்தில் பேச்சுவார்த்தைகள், ஆலோசனைகள் மூலம் தான் சரியான முடிவுகளை எட்ட முடியும். பிரதமர் அலுவலகத்தில் அமர்ந்திருக்கும் அதிகாரிகளைவிட மக்களுக்கு தான் யதார்த்த நிலை சரியாகத் தெரியும்.

நான் எப்போதும் இந்தியப் பொருளாதார நிலவரம் குறித்து ஒரு சமநிலை பார்வையையே முன்வைக்கிறேன். சமநிலைப் பார்வையை முன்வைக்கும்போதும் விமர்சனங்கள் தேவைப்படுகிறது. ஆனால் இந்த அரசாங்கம் கைதட்டுபவர்கள் மட்டுமே சரியானவர்கள் என நினைக்கிறது. அரசாங்கம் தவறே செய்யாது என்றும் நினைக்கிறது. எல்லா அரசாங்கமும் தவறு செய்யும் என்பதே நிதர்சனம்.

நான் இதற்கு முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசையும் விமர்சித்துள்ளேன். முந்தைய தேசிய ஜனநாயக கூட்டணி அரசுடனும் பணியாற்றியுள்ளேன். எனக்கு யாரையும் குறிப்பிட்டு அதிகமாக விமர்சிக்க வேண்டிய அவசியமில்லை. அதே நேரத்தில் விமர்சனங்களும் வளர்ச்சிக்கு அவசியம். ஆகையால் விமர்சனம் செய்பவர்களை விமர்சகர்கள் என்று பொத்தாம்பொதுவாக முத்திரையிடாதீர்கள்” என்று தெரிவித்துள்ளார்.

பணவீக்கம் கடந்த சில மாதங்களாகவே பெரிய சவாலாக உள்ளது. கடந்த இரண்டு நாட்களாக நாடாளுமன்றத்தில் விலைவாசி குறித்து விவாதங்கள் நடந்துள்ளன. அரசாங்கம் பணவீக்கத்திற்கு கரோனா, உக்ரைன்-ரஷ்யா மோதல் போன்ற வெளியில் இருந்து வரும் அழுத்தங்களே காரணம் மற்றபடி பொருளாதாரம் சீராக இருக்கிறது என்று கூறியுள்ளது. ஆனால் முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டிய அவசியம் பற்றி பேசியுள்ளார்.

அண்மையில், ரிசர்வ் வங்கி வெளிநாட்டு செலாவணிகள் கையிருப்பை உறுதி செய்ய மேற்கொண்ட நடவடிக்கைகளை ரகுராம் ராஜன் பாராட்டியிருந்தார். இந்த நடவடிக்கையால் இந்தியாவுக்கு இலங்கை, பாகிஸ்தான் போன்ற அண்டை நாடுகளில் ஏற்பட்டுள்ள நெருக்கடி ஏற்படாது என்று தெரிவித்துள்ளார்.

Related posts