கோத்தபய ராஜபக்சே, மனைவி சிங்கப்பூர் பயணம்

மாலத்தீவுக்கு குடும்பத்துடன் தப்பி சென்ற கோத்தபய ராஜபக்சே, மாலத்தீவில் இருந்தபடியே சிங்கப்பூருக்கு செல்ல இருக்கிறார் என்று அந்நாட்டில் இருந்து வெளிவரும் டெய்லி மிர்ரர் தகவல் வெளியிட்டது.

இந்நிலையில், இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே தனது மனைவியுடன் சவுதி ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் எஸ்.வி.788 ரக விமானத்தில் இன்று காலை 11.30 மணியளவில் புறப்பட்டு உள்ளார்.

அவர்கள் இன்று இரவு 7 மணியளவில் சிங்கப்பூர் சென்றடைய உள்ளனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர்கள் இருவரும் சிங்கப்பூரிலேயே தங்குகின்றனர் என்றும் ஜெட்டாவுக்கு செல்லவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அவர்கள் இருவரும் சிங்கப்பூரில் இருந்து சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டா நகருக்கு செல்ல இருக்கின்றனர் என மாலத்தீவு அரசு அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர் என பத்திரிகை தகவல்கள் முதலில் தெரிவித்தன.

எனினும், இதற்கு தற்போது மறுப்பு தெரிவிக்கப்பட்டு உள்ளது. இலங்கையில் நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர இன்று மதியம் 12 மணி முதல் நாளை மாலை 5 மணிவரை தலைநகர் கொழும்புவில் ஊரடங்கை அமல்படுத்தி இலங்கை அரசு உத்தரவிட்டுள்ளது.

இலங்கையில் சட்டம் மற்றும் ஒழுங்கை மீண்டும் கொண்டு வர தேவையான என்ன நடவடிக்கையை எடுக்க வேண்டுமோ அதனை செய்யும்படி ராணுவம் மற்றும் போலீசாருக்கு ரணில் விக்ரமசிங்கே உத்தரவிட்டு உள்ளார்.

Related posts