நாளை வெளியாகிறது ‘பொன்னியின் செல்வன்’ டீசர்

பொன்னியின் செல்வன்-1 படத்தின் டீசர் நாளை வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது சென்னை, ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், பிரகாஷ்ராஜ், பிரபு, சரத்குமார், திரிஷா, ஐஸ்வர்யா ராய் போன்ற பல முன்னணி நடிகர்கள் நடிப்பில் இயக்குனர் மணிரத்னம் இயக்கி வரும் திரைப்படம் ‘பொன்னியின் செல்வன்’. இப்படத்தை லைகா நிறுவனம் வழங்க மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

இரண்டு பாகங்களாக வெளியாகவுள்ள இந்தப் படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. கல்கியின் புகழ் பெற்ற “பொன்னியின் செல்வன்” நாவலை அடிப்படையாகக் கொண்டு இப்படத்தை மணிரத்னம் இயக்கி வருகிறார். இப்படம் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாக இருக்கிறது.

இதில் முதல் பாகமான “பொன்னியின் செல்வன்-1” வருகிற செப்டம்பர் மாதம் 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று ஏற்கெனவே அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. இப்படத்தில் இடம்பெறும் கதாப்பாத்திரத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் படக்குழு வெளியிட்டு வருகிறது. ஆதித்த கரிகாலனாக விக்ரமும், வந்தியதேவனாக கார்த்தியும், நந்தினியாக ஐஸ்வர்யாராயும், குந்தவையாக த்ரிஷாவும் படத்தில் இடம்பெற்றுள்ளனர்.

இந்த போஸ்டர்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த நிலையில் பொன்னியின் செல்வன்-1 படத்தின் டீசர் நாளை வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என 5 மொழிகளில் டீசர் வெளியாகும் .

Related posts