எரிபொருள் விலை மேலும் அதிகரிக்கும் – பிரதமர்

உலக சந்தையில் எரிபொருட்களின் விலை உயர்வினால் எரிபொருள் விலை மேலும் அதிகரிக்கப்படும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

“ஐரோப்பாவில் நிலவும் மோதல் சூழ்நிலை காரணமாக உலக அளவில் எரிபொருளின் விலை அதிகரித்துள்ளது. உக்ரைனில் நிலவும் மோதல் காரணமாக ஐரோப்பாவிற்கு எரிபொருள் மற்றும் எரிவாயு வழங்குவதை ரஷ்யா நிறுத்தியுள்ளது. எனவே இலங்கையிலும் எரிபொருள் விலையேற்றம் ஏற்படும்” என பிரதமர் தெரிவித்தார்.

“தற்போது இலங்கைக்கு மாதாந்த எரிபொருள் தேவையை பூர்த்தி செய்ய 550 மில்லியன் அமெரிக்க டொலர்கள் தேவைப்படுகின்றன. எவ்வாறாயினும், தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்து, இந்த நோக்கத்திற்காக தேவையான நிதியைப் பெறுவதில் நாங்கள் சிரமங்களை அனுபவித்து வருகிறோம். இதன் விளைவாக டொலர் வருமானத்தின் அடிப்படையில் அதிகபட்ச எரிபொருள் இருப்புக்களை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுப்போம். எரிபொருள் பற்றாக்குறையை தீர்க்க அதிக காலம் எடுக்கும். எனவே எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்று அவர் மேலும் கூறினார்.

Related posts