எதிர்க்கட்சித் தலைவர் விசேட அறிவிப்பு!

மக்களின் கஷ்ட நஷ்டங்களை புரிந்து கொள்ளாத இந்த ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் ஒன்றாக இணைந்து ஆட்சி அமைக்க முடியாது எனவும், அவர்கள் மக்களுடன் விளையாடிக் கொண்டே இருக்கின்றனர் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித்பிரேமதாஸ தெரிவித்தார்.

நாட்டில் உணவு மற்றும் குடிபானங்கள் தயாரித்தல் மற்றும் விநியோகம் செய்தல் சார்ந்து தொடர்புடைய துறையை பிரதிநிதித்துவப்படுத்தும், இலங்கை உணவு பதப்படுத்துபவர்கள் சங்கத்தின் பிரதிநிதிகள் மற்றும் எதிர்க்கட்சித் தலைவருடனான கலந்துரையாடல் நேற்று (17) எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம் பெற்றது.

தலைவர்களால் உருவாக்கப்பட்ட ஒரு அவலத்தையே இன்று நாடு முகம் கொடுக்க நேரிட்டுள்ளதாகவும், விஞ்ஞானபூர்வமற்ற முடிவுகளால் ஏற்ப்பட்ட விளைவுகளின் அவலத்தை இன்று முழு நாடும் அனுபவித்து வருவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

“இல்லாமைகளையும் இயலாமைகளையும்” பற்றியே ஜனாதிபதியும் பிரதமரும் நாட்டுக்கு கூறுவதாக தெரிவித்தஎதிர்க்கட்சித் தலைவர், அரசாங்கம் இயலாமையை அறிவிப்பதையே செய்து கொண்டிருப்பதாகவும், இந்த அபாயம் குறித்து தொடர்ச்சியாக தான் உட்பட எதிர்க்கட்சி கூறிய எதனையும் அரசாங்கம் செவிசாய்க்கவில்லைஎனவும் அவர் தெரிவித்தார்.

அரசாங்கம் ஆட்சிக்கு வந்தவுடன் பணக்கார குபேரர்களுக்கு வரிச்சலுகை வழங்கியதன் விளைவுகளை நாடு எதிர்கொள்கிறது என தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், நமது நாடு தரவரிசைகளில் பின்னடைவுகளை சந்திக்கும் போது இது ஒரு சர்வதேச சதி என்றே அரசாங்கம் கூறியதாகவும் அவர் தெரிவித்தார்.

இன்று மக்கள் வரிசைகளில் நின்று மரணிக்கும் நிலைக்கு நாடு வந்து விட்டதாகவும், இல்லை, இயலாது மற்றும் பார்க்கலாம் என சொல்லுவதற்கு அரசாங்கமொன்று தேவையில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

நிலையற்ற தீர்வுகளால் நாடு முன்னேறாது என தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், மக்கள் ஆணையின் மூலம் கிடைக்கப்பெறும் தீர்வே, ஒரே தீர்வு எனவும் அவர் தெரிவித்தார்.

Related posts