முற்றிலும் முடங்கிய இயல்பு வாழ்க்கை..!!

இலங்கையில் தொழிற்சங்கங்க அமைப்புகள் நேற்று நாடு தழுவிய வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டன. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.

இலங்கையின் பொருளாதார நெருக்கடி நாளுக்கு நாள் குடிமக்களை பாதித்து வருகிறது. இந்த சிக்கலில் இருந்து நாட்டை மீட்டெடுப்பதற்கு வழி காணாத அரசு பதவி விலக வேண்டும் என குறிப்பாக ராஜபக்சே குடும்பத்தினர் வீட்டுக்கு செல்ல வேண்டும் என போராட்டங்கள் அதிகரித்து வருகிறது.

ஆனால் அதிபர் கோத்தபய ராஜபக்சே, பிரதமர் மகிந்த ராஜபக்சே ஆகியோர் தங்கள் பதவியை விட்டுக்கொடுக்க தயாரில்லை. இலங்கையில் இடைக்கால அரசு அமைக்க அதிபர் கோத்தபய இறங்கி வந்தாலும், பிரதமர் மகிந்தவோ அந்த அரசும் தனது தலைமையில்தான் அமைய வேண்டும் என அடம்பிடித்து வருகிறார்.

இதனால் ராஜபக்சே சகோதரர்களுக்கு எதிரான போராட்டம் நாடு முழுவதும் விரிவடைந்து வருகிறது. இந்த போராட்டத்துக்கு பல்வேறு தரப்பினரும் தற்போது ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் இலங்கையின் சுமார் 1,000 வர்த்தக அமைப்புகள் மற்றும் தொழிற்சங்கங்கள் நேற்று நாடு தழுவிய ஒருநாள் வேலை நிறுத்ததில் ஈடுபட்டன. ‘மக்களுக்கு கீழ்ப்படியுங்கள் – அரசு பரவி விலக வேண்டும்’ என்ற கருப்பொருளில் இந்த போராட்டம் நடந்தது.

அதிபர் கோத்தபய ராஜபக்சே, பிரதமர் மகிந்த ராஜபக்சே மற்றும் ஒட்டுமொத்த அரசும் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி நடந்த இந்த வேலை நிறுத்தத்தில், சுகாதாரம், துறைமுகங்கள், மின்சாரம், கல்வி, தபால், வங்கி என பல்வேறு துறைகளை சேர்ந்த தொழிற்சங்கத்தினர் பங்கேற்றனர்.

இந்த வேலை நிறுத்தத்தில் ஆயிரக்கணக்கான தேயிலை தோட்ட தொழிலாளர்களும் இணைந்தனர். அத்துடன் வர்த்தக அமைப்புகளும் தங்கள் கடைகளை அடைத்து போராட்டத்தில் குதித்தன.

இதனால் நாடு முழுவதும் கல்வி நிறுவனங்கள், வங்கிகள், அலுவலகங்கள் போன்றவை ஊழியர்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டன. மேலும் பெரும்பாலான பகுதி களில் குறைவான போக்குவரத்து, வர்த்தக நிறுவனங்கள் மூடல் போன்றவற்றால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது.

வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட தொழிற்சங்கத்தினர் நாட்டின் பல்வேறு பகுதிகளில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பல இடங்களில் பரபரப்பு நிலவியது.

இந்த போராட்டம் குறித்து ஆசிரியர் தொழிற்சங்க செய்தி தொடர்பாளர் ஜோசப் ஸ்டாலின் கூறுகையில், ‘ராஜபக்சே அரசு பதவி விலக வேண்டும் என மக்கள் தெருக்களில் இறங்கி போராடி வரும் நிலையில், அரசோ ஆட்சியில் தொடர முயன்று வருகிறது’ என குற்றம் சாட்டினார்.

சுகாதார ஊழியர் தொழிற்சங்கத்தை சேர்ந்த ரவி குமுதேஷ் கூறும்போது, ‘ராஜபக்சே அரசு ராஜினாமா செய்ய ஒரு வாரம் அவகாசம் கொடுக்கிறோம். அதற்குப்பின்னும் அவர்கள் ஆட்சியில் நீடித்தால், அவர்கள் பதவி விலகும்வரை எங்கள் போராட்டத்தை தொடருவோம்’ என்று தெரிவித்தார்.

இந்த வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் கொழும்பு காலி முகத்திடலில் 20-வது நாளாக நடந்து வரும் பொதுமக்களின் போராட்டத்தில் மாலையில் இணைந்தனர்.

முன்னதாக இந்த வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் போக்குவரத்து மற்றும் வர்த்தக நடைமுறைகளை பாதிக்கும் வகையில் செயல்பட்டால் கைது நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு உத்தரவிடப்பட்டு இருந்தது.

இதனால் பல இடங்களில் போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டனர். இதனால் போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதலும் ஏற்பட்டது.

Related posts