பஹத் பாசில்- நஸ்ரியா இணைந்த ‘நிலை மறந்தவன்’

மலையாள பட உலகில் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக இருக்கும் பஹத் பாசில், தமிழ், தெலுங்கு ஆகிய பிற மொழி படங்களில் வில்லனாக நடித்து வருகிறார்.

இவர் நடித்து 2 ஆண்டுகளுக்கு முன் திரைக்கு வந்த மலையாள படம், ‘ட்ரான்ஸ்.’ கேரளாவில் வெற்றி பெற்ற இந்த படம், ‘நிலை மறந்தவன்’ என்ற பெயரில் தமிழில் தயாராகிறது.

மதத்தின் பெயரைச் சொல்லி பிழைப்பு நடத்துவதுடன், அப்பாவி மக்களின் தெய்வ நம்பிக்கையை தங்களுக்கு சாதகமாக்கி, அவர்கள் உயிருடன் விளையாடுகிறது ஒரு கும்பல். படித்து வேலை கிடைக்காத ஒரு இளைஞன் தன்னை அறியாமலேயே அந்த கும்பலுக்கு துணை போகிறான்.

ஒரு கட்டத்தில் உண்மை தெரியவரும்போது, அந்த இளைஞன் என்ன முடிவு எடுக்கிறான்? என்பது கதை. இளைஞராக பஹத் பாசில் நடித்துள்ளார்.

‘ராஜமாணிக்கம்’, ‘உஸ்தாத் ஓட்டல்’ ஆகிய படங்களை டைரக்டு செய்தவரும், ‘பிரேமம்’ படத்தை தயாரித்தவருமான பிரபல மலையாள இயக்குனர் அன்வர் ரசீத் இயக்கிய படம் இது.

சினிமாவை விட்டு சில வருடங்கள் விலகியிருந்த நஸ்ரியா, இந்த படத்தின் மூலம் மறுபிரவேசம் செய்தார். படத்தின் கதாநாயகி இவர்தான். டைரக்டர் கவுதம் வாசுதேவ் மேனன், `கோலி சோடா-2’ படத்தில் நடித்த செம்பான் வினோத் ஆகிய இருவரும் வில்லன்களாக நடிக்கிறார்கள். தர்மா விசுவல் கிரியேஷன்ஸ் தயாரிக்கிறது.

Related posts