மன்னிப்பு கேட்க மாட்டேன் : இளையராஜா உறுதி

மோடியை அம்பேத்கருடன் ஒப்பிட்டு புத்தகத்திற்கு அணிந்துரை எழுதிய விவகாரத்தில், ‘மன்னிப்பு கேட்கமாட்டேன்’ என இளையராஜா கூறியதாக கங்கை அமரன் தெரிவித்துள்ளார்.
ப்ளூ கிராஃப் டிஜிட்டல் ஃபவுண்டேஷன் நிறுவனம் ‘மோடியும் அம்பேத்கரும்’ என்ற தலைப்பில் புத்தகம் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் சீர்திருத்தவாதிகளின் கருத்துகளும், செயல்பாட்டாளர்களின் அமலாக்கமும் என்ற தலைப்பில் புத்தகத்தின் முன்னுரையில் இசையமைப்பாளர் இளையராஜா, “பிரதமர் மோடி தலைமையில் நாடு வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது. அனைத்து துறைகளிலும் முன்னேற்றம் கண்டு வருகிறது.
இந்தியாவின் உள்கட்டமைப்புகள் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது, சமூக நீதி விஷயத்தில் பிரதமர் மோடி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். மோடியின் முத்தலாக் தடை போன்ற பல்வேறு சமூகப் பாதுகாப்பு திட்டங்களைக் கண்டு அம்பேத்கர் பெருமிதம் கொள்வார். அம்பேத்கரும் மோடியும் இந்தியா குறித்து பெரிய கனவு கண்டவர்கள்” என்று குறிப்பிட்டிருக்கிறார். இளையராஜாவின் இந்தக் கருத்துதான் சர்ச்சையை பெரும் விவாதத்தைத் தூண்டியிருக்கிறது.
இது தொடர்பாக இசையமைப்பாளர் இளையராஜாவின் சகோதரர் கங்கை அமரன் செய்தித் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில், ”மோடி – அம்பேத்கர் ஒப்பீடு விவகாரம் தொடர்பாக நான் இளையராஜாவிடம் பேசினேன். அப்போது இளையராஜா,”இந்த விவகாரத்தில் நான் என்னுடைய கருத்தைத்தான் கூறினேன். நான் எழுதிய கருத்து தவறு என்று மன்னிப்பு கேட்க வேண்டுமா? மற்றவர்கள் எப்படி கருத்து சொல்கிறார்களோ அதே போன்று நான் என்னுடைய கருத்தைக் கூறினேன். அதற்கு எனக்கு எதிரான விமர்சனங்கள் வந்தாலும், நான் ஏற்றுக் கொள்கிறேன். என்னை பொறுத்தவரை மோடி எப்படிப்பட்டவர் என்பதைத் தான் கூறியிருக்கிறேன். தனிப்பட்ட முறையில் மோடியை எனக்கு பிடிக்கும்… அவ்வளவுதான்.பதவி வாங்குவதற்காகவெல்லாம் நான் மோடியை வேண்டுமென்று புகழ்ந்து பேசவில்லை. சொல்லப்போனால் எனக்கு அப்படியான எந்தப் பதவியும் தேவையில்லை. நான் கட்சிக்காரணும் இல்லை. . நான் பல பாட்டுக்கு இசை அமைக்கிறேன். `சில பாட்டு நல்லா இருக்கு என்பார்கள். சில பாடல் நல்லா இல்லை’ என்பார்கள். அதைப் போன்றுதான் எனது இந்தக் கருத்தும். இந்த விமர்சனங்களையும் ஏற்றுக் கொள்கிறேன்.
என்னிடம் ஒரு புத்தகத்தை கொடுத்து முன்னுரை எழுதச் சொன்னார்கள். நான் அம்பேத்கர், மோடியை ஒப்பிட்டு எழுதினேன். எனக்கு இரண்டுபேரையும் பிடிக்கும். என் பார்வையில் அம்பேத்கர் சொன்னதையெல்லாம் மோடி செய்து வருகிறார். அதை நான் கூறியது தவறா? நான் மன்னிப்புக்கேட்க மாட்டேன். விமர்சனங்களுக்கு பதிலளிக்க நான் தயார்’’ என்று இளையராஜா தன்னிடம் கூறியதாக கங்கை அமரன் தெரிவித்துள்ளார்.

Related posts