நடிகர்கள் விஜய், அஜித்தை விமர்சித்த அருண்பாண்டியன்..!

நடிகர்கள் விஜய், அஜித் ஆகியோர் பெரும் தொகையை சம்பளமாக பெறுவதால் படத்தின் தரம் குறைவதாக நடிகர் அருண் பாண்டியன் விமர்சித்துள்ளார். இயக்குனர் ராம்நாத் பழனிகுமார் இயக்கத்தில் கருணாஸ், இனியா, ரித்விகா, அருண்பாண்டியன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள ‘ஆதார்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது.

இந்த விழாவில் இயக்குனர் பாரதிராஜா, இசையமைப்பாளர் தேவா, பூச்சி முருகன், அமீர், இரா. சரவணன், தயாரிப்பாளர் தேனப்பன், நடிகர் அருண்பாண்டியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பேசினார்கள். அப்போது பேசிய நடிகர் அருண் பாண்டியன் கூறியதாவது:-

தற்போது எல்லா மொழிப்படங்களும் தமிழ்நாட்டில் கொடிகட்டி பறந்து கொண்டிருக்கின்றன. ஆனால் சமீபத்தில் வெளியான விஜய் படமோ, அஜித் படமோ சினிமாவுக்கு செலவு செய்யவில்லை. தனக்கு செலவு செய்கிறார்கள். படத்தின் பட்ஜெட்டில் 90 சதவீதம் அவர்கள் சம்பளமாக வாங்கினால் எப்படி படம் எடுக்க முடியும்? கண்டிப்பாக எடுக்க முடியாது.

அதனால் இந்த மேடையை ஒரு சந்தர்ப்பமாக எடுத்துக்கொண்டு இந்த போக்கை வன்மையாக கண்டிக்கிறேன். நாங்கள் படம் எடுக்கும் போது, 10 சதவீதம் தான் சம்பளத்திற்கு வரும். 90 சதவீதம் படத்திற்கு போகும். அப்படி இருந்தால் தான் நாம் பிறமொழி படங்களுடன் தமிழ் படங்களை ஒப்பீட்டு பார்க்க முடியும்.

Related posts