தமிழகத்தின் சார்பில் அரங்கை திறந்து வைப்பதில் பெருமிதம்

துபாயில் கடந்த ஆண்டு அக்டோபர் 1-ந் தேதி முதல் உலக அளவிலான எக்ஸ்போ 2020 கண்காட்சி நடைபெற்று வருகிறது. 5- வருடங்களுக்கு ஒரு முறை நடத்தப்படும் இந்த கண்காட்சி வருகிற 31-ந் தேதி வரை நடைபெற உள்ளது.

இந்த கண்காட்சியில் இந்தியா, அமீரகம் உள்பட 192 நாடுகள் பங்கேற்றுள்ளன. இவற்றின் சார்பில் அந்த வளாகத்தில் தனித்தனி அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த கண்காட்சியில் இந்திய அரங்கில் கண்காட்சி தொடங்கியது . மாநில அரசுகளும் தங்கள் தளங்களை அமைத்துக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டது. அதன்படி துபாய் எக்ஸ்போ 2020 கண்காட்சியில், ‘தமிழ்நாடு தளம்’ உருவாக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரங்கு மூலம் சர்வதேச அளவில் தொழில் முதலீடுகளை ஈர்க்க தமிழக அரசு திட்டமிட்டு இருக்கிறது. இந்த அரங்கை தொடங்கி வைப்பதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், துபாய் சென்றுள்ளார். துபாயில் இன்று பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். குறிப்பாக ஐக்கிய அரபு அமீரக மந்திரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

பின்னர் துபாய் எக்ஸ்போ 2020 கண்காட்சிக்கு சென்ற மு.க.ஸ்டாலின், இந்திய அரங்கை பார்வையிட்டு தமிழ்நாடு தளத்தை முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

பின்னர் பேசிய முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறுகையில் ;

உற்பத்தி துறையில் சிறந்து விளங்கும் தமிழகத்தின் சார்பில் அரங்கை திறந்து வைப்பதில் பெருமிதம் .இந்த அரங்கினை யார் பார்வையிட்டாலும் ,தமிழ்நாடு அனைத்து துறைகளிலும் சாதித்துள்ள ஒருங்கிணைந்த புரிதலை அவர்களுக்கு வழங்கும் இவ்வாறு அவர் கூறினார் .

Related posts