ஆண்கள் நிஜ ஹீரோவாக என்ன செய்ய வேண்டும்?

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாகவும் மற்றும் பாடகியாகவும் வலம்வரும் ஆண்ட்ரியா ஜெர்மையா தற்போது சோஷியல் மீடியாவில் ஒரு முக்கியமான வேண்டுகோளை முன்வைத்துள்ளார். நீங்கள் நல்லது செய்ய விரும்பினால் இன்றே ரத்ததானம் செய்யுங்கள் என்று நடிகை ஆண்ட்ரியா கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவில் துணிச்சலான கதாபாத்திரங்களில் நடித்து புகழ் பெற்றவர் நடிகை ஆண்ட்ரியா. இவரது நடிப்பில் பிசாசு-2’, ‘மாளிகை’ படங்கள் விரைவில் திரைக்கு வரவுள்ளது. ‘கா’, ‘நோ என்ட்ரி’, ‘வட்டம்’ மற்றும் பெயரிடப்படாத 2 படங்களிலும் நடித்து வருகிறார்.முன்னணி நாயகியாக வலம் வரும் ஆண்ட்ரியா பின்னணி பாடகியும் ஆவார்.

சமீபத்தில் வெளியான ‘புஷ்பா’ படத்தில் ‘ஓ சொல்றியா மாமா…’ என்ற பாடலை தனது கிறங்கடிக்கும் குரலால் பாடி கிளுகிளுப்பூட்டினார்.

சமூக வலைத்தளத்தில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ள நடிகை ஆண்ட்ரியா தற்போது ஒரு முக்கியமான வேண்டுகோள் விடுத்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

“நீங்கள் நிஜ ஹீரோவாக இருக்க வேண்டுமென்றால் அனைவரும் ரத்ததானம் செய்யுங்கள். உங்களின் ஒவ்வொரு துளி ரத்தமும் ஒரு உயிரை காப்பாற்றும். 80 சதவீத இளம் பெண்கள் ரத்ததானம் கொடுக்க முன் வந்தாலும், உடல்ரீதியாக அவர்களால் சரியான முறையில் ரத்ததானம் கொடுக்க முடியவில்லை. அந்த சிக்கலை நானே பல முறை சந்தித்துள்ளேன். எனவே ஆண்களே… நீங்கள் நிஜ ஹீரோவாக வேண்டும் என்றால், ரத்ததானம் செய்யுங்கள். இதற்காக உங்களுக்கு நான் ஒரு பாடலை பாடுவேன்”.

இவ்வாறு அவர் கூறியுள்ளார். அத்துடன் ரத்ததானம் செய்யும் தனது புகைப்படத்தையும் அவர் பதிவிட்டுள்ளார். ஆண்ட்ரியாவின் இந்த வேண்டுகோளுக்கு அவரது ரசிகர்கள் பெருமளவில் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

Related posts