தமிழக மீனவர்கள் மீது கடற்கொள்ளையர்கள் தாக்குதல்

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள புஷ்பவனத்தை சேர்ந்த நாகமணி என்பவருக்கு சொந்தமான படகில் கடலுக்கு சென்ற நாகமுத்து, பன்னீர்செல்வம், ராஜேந்திரன் ஆகிய மூன்று பேர் கோடியக்கரைக்கு தென்கிழக்கே மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்கொள்ளையர்கள், மீனவர்கள் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தினர்.

இதன்பின்னர், அவர்களிடமிருந்த 200 கிலோ வலை, ஜி.பி.எஸ். கருவி, வாக்கி டாக்கி உள்ளிட்ட ஒரு லட்சம் மதிப்புள்ள மீன்பிடி உபகரணங்களை கொள்ளையடித்து சென்றனர். காயமடைந்த மீனவர்கள் 3 பேரும், சக மீனவர்கள் உதவியுடன் கரை திரும்பிய நிலையில், சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இதற்கிடையே, இந்த சம்பவம் நடைபெற்ற சில மணிநேரத்திற்கு பிறகு, மீண்டும் அதே பகுதியில் மீன் பிடித்து கொண்டிருந்த நாகை மாவட்ட மீனவர்கள் 8 பேர் மீது கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். பின்னர், அவர்களிடமிருந்த வலைகளை அவர்கள் பறித்து சென்றுள்ளனர். இதனையடுத்து காயமடைந்த மீனவர்கள் கரை திரும்பினர். கடந்த 24 மணிநேரத்தில் 11 மீனவர்கள் மீது அடுத்தடுத்து கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியுள்ள நிலையில், கடலோர பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என்று மீனவர்கள் தரப்பில் இருந்து கோரிக்கை விடப்பட்டுள்ளது.

Related posts