‘புஷ்பா’ படத்துக்கு கமல் பாராட்டு

அல்லு அர்ஜுன் நடித்த ‘புஷ்பா’ படத்துக்கு கமல்ஹாசன் பாராட்டு தெரிவித்துள்ளார்.
சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ‘புஷ்பா’. தெலுங்கு, தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் இப்படம் உலகமெங்கும் வெளியானது. ஃபகத் பாசில், ராஷ்மிகா மந்தனா, சுனில், அஜய் கோஷ் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். சமந்தா ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார்.
ரங்கஸ்தலம்’ வெற்றிக்குப் பிறகு சுகுமார் இயக்கிய படம், ஹிட் பாடல்கள், சர்ச்சைகள், கடைசி நேர இழுபறி எனப் பெரும் எதிர்பார்ப்புக்கிடையே இப்படம் வெளியானது. சமூக வலைதளங்களில் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் படம் வெளியாகி இரண்டே நாட்களில், உலக அளவிலான பாக்ஸ் ஆஃபீஸில் ரூ.100 கோடி வசூலைக் குவித்தது.
கரோனா ஊரடங்குக்குப் பிறகு வெளியான அனைத்துப் படங்களின் வசூலையும் முறியடித்து புஷ்பா முதல் நாளில் ரூ.45 கோடி வசூலித்தது. படம் வெளியாகி 18 நாட்களில் உலகம் முழுவதும் ரூ.200 கோடிக்கும் வசூலித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் ‘புஷ்பா’ படத்துக்கு நடிகர் கமல்ஹாசன் பாராட்டு தெரிவித்ததாக இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இது தொடர்பாக சில புகைப்படங்களையும் அவர் பகிர்ந்துள்ளார். அதில் அவர் “நேரம் ஒதுக்கி எங்களின் ‘புஷ்பா’ திரைப்படத்தைப் பார்த்த அன்புள்ள உலகநாயகன் கமல்ஹாசன் சாருக்கு மிக்க நன்றி. நீங்கள் மிகவும் இனிமையானவர். எங்கள் அனைவரது பணி குறித்தும் நீங்கள் கூறிய அன்பான வார்த்தைகளுக்கு நன்றி” என்று பதிவிட்டுள்ளார்.
தேவிஸ்ரீ பிரசாத்தின் பதிவில் நடிகர் அல்லு அர்ஜுனும் கமலுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

Related posts