‘மின்னல் முரளி’ படத்துக்கு கரண் ஜோஹர் பாராட்டு

மின்னல் முரளி’ படத்துக்கு இயக்குநர் கரண் ஜோஹர் பாராட்டு தெரிவித்துள்ளார்.
பேசில் ஜோசப் இயக்கத்தில் டொவினோ தாமஸ், குரு சோமசுந்தரம் நடித்துள்ள படம் ‘மின்னல் முரளி’. சூப்பர் ஹீரோ கதைக்களத்தைக் கொண்ட இப்படம் சமீபத்தில் நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்திய பிரபலங்கள், ரசிகர்கள் பலரும் இப்படத்தைப் பார்த்துவிட்டுப் பாராட்டி வருகின்றனர்.
இந்நிலையில் இப்படத்துக்கு பாலிவுட் இயக்குநர் கரண் ஜோஹர் வாட்ஸ் அப் வழியாகப் பாராட்டு தெரிவித்துள்ளதாக நடிகர் டொவினோ தாமஸ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு ஸ்க்ரீன்ஷாட் படத்தைப் பகிர்ந்துள்ளார்.
அதில் கரண் ஜோஹர் அனுப்பிய செய்தியில் கூறப்பட்டிருப்பதாவது:
“ஹேய் டொவினோ, ஒருவழியாக நேற்று இரவு ‘மின்னல் முரளி’ பார்க்கும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது. படம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. மிகவும் புத்திசாலித்தனமாக உருவாக்கப்பட்டு, பொழுதுபோக்கு விகிதம் படம் முழுக்கத் தக்கவைக்கப்பட்டுள்ளன. தனித்துவமான ஒரு சூப்பர் ஹீரோ படம். நிச்சயமாக நீங்கள் அபாரமாக நடித்துள்ளீர்கள். வாழ்த்துகள்”.
இவ்வாறு கரண் ஜோஹர் தெரிவித்துள்ளார்.

Related posts