ராஜேந்திர பாலாஜியை கைது செய்ய என்ன அவசரம்?

பணமோசடி வழக்கில் ராஜேந்திர பாலாஜி நேற்று கைதான நிலையில் அவரது முன் ஜாமீன் மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது.
ராஜேந்திர பாலாஜியின் முன் ஜாமீன் மனுவை இன்று விசாரிக்க இருந்தோம். அதற்குள் கைது செய்ய என்ன அவசரம். இது அரசியல் உள் நோக்கம் கொண்ட வழக்கா என சுப்ரீம் கோர்ட்டு கேள்வி எழுப்பி உள்ளது.
மேலும் ராஜேந்திர பாலாஜி மீதான வழக்கில் பாபுராய், பலராமன், முத்துப்பாண்டியன் ஆகிய 3 பேரை கைது செய்ய சுப்ரீம் கோர்ட்டு இடைக்கால தடை விதித்து உள்ளது.
அரசு துறைகளில் வேலை வாங்கித்தருவதாக கூறி ரூ.3 கோடியே 10 லட்சம் மோசடி செய்ததாக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை கர்நாடகாவில் தனிப்படை போலீசார் நேற்று கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட ராஜேந்திரபாலாஜி விருதுநகர் குற்றவியல் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க கோர்ட் உத்தரவிட்டது. இதன்படி வரும்20ம் தேதி வரை நீதிமன்ற காவலில் இருக்கும் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி முதலில் மதுரை சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் நிர்வாகக் காரணங்களுக்காக தற்போது திருச்சி மத்திய சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
முன்னதாக ராஜேந்திர பாலாஜி தனக்கு முன் ஜாமீன் வழங்கக்கோரி தாக்கல் செய்திருந்த மனுவை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் அவர் மேல்முறையீடு செய்திருந்தார். இந்த மேல் முறையீட்டு மனு, சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, ராஜேந்திர பாலாஜி மீது அரசியல் உள்நோக்கத்துடன் வழக்குப்பதிவு செய்யப்பட்டதா? என சுப்ரீம் கோர்ட் கேள்வி எழுப்பியது. மேலும், ராஜேந்திர பாலாஜி தாக்கல் செய்த முன் ஜாமீன் மனுவை இன்று விசாரிக்க இருந்தோம். அதற்குள் ஏன் இவ்வளவு அவசரம்? என்று தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பினர்.
மேலும், இந்த வழக்கில் தொடர்புடைய பாபுராய், பலராமன், முத்துப்பாண்டி ஆகிய 3 பேரை கைது செய்ய சுப்ரீம் கோர்ட்டு இடைக்கால தடை விதித்தது. இதனை தொடர்ந்து ராஜேந்திர பாலாஜி தாக்கல் செய்த முன்ஜாமீன் மனு தொடர்பாக பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்ட சுப்ரீம் கோர்ட் இந்த வழக்கை வரும் 10-ம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.

Related posts