புனித் ராஜ்குமார் என் கண்ணுக்கு முன்னால் வளர்ந்த குழந்தை

கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் சில தினங்களுக்கு முன்பு உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தபோது மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார். அவரது மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் இந்தியத் திரையுலக பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்தனர்.

புனித் மறைவுக்கு ஒரு நாள் முன்னதாக நடிகர் ரஜினிகாந்துக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில் தற்போது புனித் ராஜ்குமார் மறைவிற்கு ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார்.

அவர் பேசும்போது, ”எனக்கு சிகிச்சை முடிந்து நன்றாக குணமாகி வருகிறேன். நான் ஆஸ்பத்திரியில் இருக்கும்போது புனித் ராஜ்குமார் அகால மரணம் அடைந்திருக்கிறார்.

அந்த விஷயத்தை எனக்கு இரண்டு நாள் கழித்துத்தான் சொன்னார்கள். அதை கேட்டு நான் ரொம்ப ரொம்ப வேதனைப்பட்டேன். மனது மிகவும் கஷ்டமாக இருந்தது.

என் கண்ணுக்கு முன்னால் வளர்ந்த குழந்தை. திறமையான அன்பும் பண்பும் கொண்ட அருமையான குழந்தை. நல்ல பெயரும் புகழும் உச்சியில் இருக்கும்போதே இந்த சின்ன வயதில் நம்மை விட்டு அவர் மறைந்து இருக்கிறார்.

அவரது இழப்பு கன்னட சினிமா துறையால் ஈடு கட்டவே முடியாது. அவரது குடும்பத்தாருக்கு ஆறுதல் சொல்ல எனக்கு வார்த்தைகளே இல்லை. புனித் ஆத்மா சாந்தி அடையட்டும் என்று கூறியுள்ளார்.

Related posts