மாஸ்கோ சென்று ரஷியாவை எச்சரித்த சிஐஏ தலைவர்

ரஷியாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே பல ஆண்டுகளாக எல்லைப்பிரச்சினை உள்ளது. உக்ரைனின் கிரிமியா தீபகற்பத்தை 2014-ம் ஆண்டு ரஷியா சட்டவிரோதமாக கைப்பற்றியது. இதனை தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையான மோதல் அதிகரித்து வருகிறது. உக்ரைனுக்கு அமெரிக்கா ஆதரவு அளித்து வருகிறது.

இதற்கிடையில், கடந்த சில நாட்களாக உக்ரைன் எல்லையில் ரஷியா படைகளை குவித்து வருகிறது. அதிநவீன ஆயுதங்கள், போர் தளவாடங்கள் குவிக்கப்பட்டுள்ளன. மேலும், 90 ஆயிரம் வீரர்களையும் உக்ரைன் எல்லையில் ரஷியா குவித்துள்ளது. இதனால், உக்ரைன் மீது ரஷியா படையெடுக்கலாம் என்ற அச்சம் நிலவி வருகிறது.

இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வந்த நிலையில் கடந்த செவ்வாய்கிழமை அமெரிக்க உளவுஅமைப்பான சிஐஏ தலைவர் வில்லியம் பர்ன்ஸ் ரஷியா சென்றார். அவர் ரஷிய உளவு அமைப்பின் தலைவரான நிகோலோ பட்ருஷ்வை மாஸ்கோவில் சந்தித்தார். இந்த சந்திப்பின் போது இருநாட்டு உறவை மேம்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் அமெரிக்கா தெரிவித்தது.

இந்நிலையில், ரஷியாவை எச்சரிக்கவே சிஐஏ தலைவர் வில்லியம் பர்ன்ஸ் மாஸ்கோ சென்றுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. உக்ரைன் எல்லையில் படைகளை குவித்து வரும் ரஷியாவை எச்சரிக்கவே வில்லியம் பர்ன்ஸ் மாஸ்கோ சென்றுள்ளார் என்று அமெரிக்கா மற்றும் உக்ரைன் அரசின் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

உக்ரைன் எல்லையில் ரஷியா படைகளை குவிக்கும்பட்சத்தில் அமெரிக்க படைகள் உக்ரைனுக்கு அனுப்பி வைக்கப்படலாம் என்ற தகவல்களும் வெளியாகியுள்ளது. இதனால், உக்ரைன் விவகாரத்தில் அமெரிக்கா – ரஷியா இடையே மோதல் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

Related posts