பருப்பு, அரிசியின் விலையை பார்த்துக் கொள்ளவா நான் ?

நாட்டு மக்கள் என்னை ஜனாதிபதியாக நியமித்தது பருப்பு மற்றும் அரிசியின் விலைகளை பார்த்துக் கொள்வதற்கு என்றால் அதற்கு நான் தேவையில்லை என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நூறு சதவீதம் கரிம உரத்தை பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்டு வரும் விவசாய பண்ணை ஒன்றை பார்வையிட இன்று (23) சென்ற போது ஜனாதிபதி இதனை தெரிவித்திருந்தார்.

“எங்களது முந்தைய அரசாங்கங்கள் கூட இதைச் செய்ய முயற்சித்தன. இது கடினமான பணி. எனது முன்னோர்களுக்கு தெரியும் பாரம்பரிய பயிற்செய்கையை எப்படி செய்வது என்று. ஆனால் துரதிஷ்டவசமாக எந்த தலைவரும் இந்த முடிவை எடுக்கவில்லை.

என்னை நியமித்தது பருப்பு மற்றும் அரிசியின் விலையைப் பார்த்துக் கொள்வதற்காக என்றால் அதற்கு நான் தேவையில்லை. அதை விட மாற்றம் ஒன்றை கொண்டு வருவதற்காகவே. விசேடமாக இந்த விவசாயத் துறை தொடர்பில். நான் வந்தது முதல் உரத்தை இலவசமாக வழங்கினேன். உண்மையில் விவசாயியின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவே இலவசமாக வழங்கப்பட்டது. அதேபோல், நெல்லின் உத்தரவாத விலையை அதிகரித்தோம். ” என்றார்.

100% கரிம உரத்தை உற்பத்தி செய்து அதனூடாக வெற்றிகரமாக காய்கறிகள் மற்றும் பழங்களை பயிரிடும் இந்த பண்ணை தொடர்பில் நேற்று (22) அத தெரண 6.55 பிரதான செய்தி அறிக்கையில் வௌிப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts