அமெரிக்காவுடன் இணைந்து பணியாற்ற இலங்கை தயார்!

இருதரப்பு மற்றும் பலதரப்பு அரங்குகளில் பரஸ்பர நலன்களை முன்னேற்றுவதற்காக அமெரிக்காவுடன் இணைந்து பணியாற்றத் தயாராக இருப்பதாக இலங்கை தெரிவித்துள்ளது. வெளியுறவு அமைச்சர் தினேஷ் குணவர்தன அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் அண்டனி பிளிங்கனுக்கு எழுதிய கடிதத்திலேயே மேற்கண்ட விடயத்தினை தெளிவுபடுத்தியுள்ளார். 1948 இல் இராஜதந்திர உறவுகள் நிறுவப்பட்டதிலிருந்து, அமெரிக்காவுடனான இலங்கையின் உறவுகள் பரஸ்பர நன்மை பயக்கும் ஒத்துழைப்பின் பல்வேறு பகுதிகளிலும் தொடர்ந்து விரிவடைந்து வருகின்றன.எங்கள் இரு நாடுகளின் மற்றும் மக்களின் முன்னேற்றத்திற்காக இந்த பன்முக மற்றும் துடிப்பான கூட்டாண்மை மேலும் பலப்படுத்தப்பட்டு ஆழமடையும் என்று நான் நம்புகிறேன்.

கொவிட்-19 தொற்றுநோயைக் கட்டுப்படுத்த அமெரிக்கா அளித்த விலைமதிப்பற்ற ஆதரவையும் உதவியையும் அரசாங்கத்துடன் இணைந்து இலங்கை மக்களும் பாராட்டுகின்றனர் என அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் அமெரிக்க ஜனாதிபதி பைடனின் சமீபத்திய முயற்சி, தேவைப்படும் நாடுகளுக்கு மில்லியன் கணக்கான தடுப்பூசிகள் அளவுகள் நன்கொடையாக வழங்குதல் உள்ளிட்ட செயற்பாடுகளுக்கும் தினேஷ் குணவர்த்தன பாராட்டுக்களை தெரிவித்தார். இக் கடித்தில் வெளியுறவு அமைச்சர், அமெரிக்காவின் சுதந்திரத்தின் 245 ஆவது ஆண்டு விழாவின் சந்தர்ப்பத்தில் தனது மனமார்ந்த வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

Related posts