‘ஒத்த செருப்பு’ இந்தி ரீமேக்கில் அபிஷேக் பச்சன்?

ஒத்த செருப்பு’ படத்தின் இந்தி ரீமேக்கில் நடிக்க அபிஷேக் பச்சனிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
பார்த்திபன் இயக்கி, தயாரித்து, நடித்த படம் ‘ஒத்த செருப்பு’. 2019-ம் ஆண்டு செப்டம்பர் 20-ம் தேதி வெளியான இந்தப் படத்துக்கு ராம்ஜி ஒளிப்பதிவு செய்திருந்தார். படம் முழுவதும் பார்த்திபன் என்கிற ஒற்றைக் கதாபாத்திரம் மட்டுமே இடம் பெற்றிருந்தது. இந்தப் படத்தைப் பார்த்த பல்வேறு திரையுலக பிரபலங்களும் பார்த்திபனை வெகுவாகப் பாராட்டினார்கள்.
மேலும், இந்தப் படத்துக்காகப் பல்வேறு விருதுகளையும் வென்றார் பார்த்திபன். இந்தப் படத்தை இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் ரீமேக் செய்யத் திட்டமிட்டு வருகிறார். இதற்காகப் பல்வேறு தரப்பினரிடம் பேசி வருகிறார் பார்த்திபன். தற்போது அந்தப் பேச்சுவார்த்தை சுமுகமாக முடியும் சூழல் ஏற்பட்டு இருப்பதாகக் கூறப்படுகிறது.
‘ஒத்த செருப்பு’ படத்தின் இந்தி ரீமேக்கில் அபிஷேக் பச்சனை நடிக்கவைக்கப் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார் பார்த்திபன். அபிஷேக் விரைவில் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவார் என்று கூறப்படுகிறது. முன்னதாக சென்னை வந்த நவாசுதீன் சித்திக்கிடம் ‘ஒத்த செருப்பு’ இந்தி ரீமேக்கில் நடிக்க பார்த்திபன் பேச்சுவார்த்தை நடத்தியது நினைவுகூரத்தக்கது.
அதேபோல் ஆங்கிலத்தில் ‘ட்ரூ லைஸ்’ படத்தின் தயாரிப்பாளரிடம் ‘ஒத்த செருப்பு’ ரீமேக் தொடர்பாகப் பேசப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Related posts