படத்தை உறுதி செய்த ஜூனியர் என்.டி.ஆர்

கே.ஜி.எஃப்’ இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்கவுள்ளதை ஜூனியர் என்.டி.ஆர் உறுதி செய்துள்ளார்
ராஜமவுலி இயக்கத்தில் உருவாகி வரும் ‘ஆர்.ஆர்.ஆர்’ படத்தில் ராம் சரணுடன் நடித்து வருகிறார் ஜூனியர் என்.டி.ஆர். பெரும் பொருட்செலவில் உருவாகி வரும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு கரோனா அச்சுறுத்தலால் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இன்னும் முழுமையாக இதன் படப்பிடிப்பு முடிவடையவில்லை.
இந்தப் படத்துக்குப் பிறகு ஜூனியர் என்.டி.ஆர் நடிக்கவுள்ள அடுத்த படம் குறித்துப் பல்வேறு தகவல்கள் வெளியாகின. இறுதியாக, கொரட்டலா சிவா இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்கவுள்ளதை ஜூனியர் என்.டி.ஆர் உறுதி செய்தார். இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியிடப்பட்டுவிட்டது.
இதனிடையே, நீண்ட நாட்களாக ‘கே.ஜி.எஃப்’ இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கவுள்ள படத்தில் ஜூனியர் என்.டி.ஆர் நடிக்கவுள்ளார் என்று செய்தி வெளியானது. இதனை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரிக்கவுள்ளதாகவும் கூறப்பட்டது. ஆனால், ஜூனியர் என்.டி.ஆர் எதையுமே உறுதிப்படுத்தாமல் இருந்தார்.
தற்போது ‘ஆர்.ஆர்.ஆர்’ படம் தொடர்பாக முன்னணி ஆங்கில இணையதளம் ஒன்றுக்குப் பேட்டியளித்துள்ள ஜூனியர் என்.டி.ஆர், “அடுத்ததாக கொரட்டலா சிவா இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்கவுள்ளேன். அதற்கான ஐடியா தயாராகிவிட்டது. திரைக்கதை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதனைத் தொடர்ந்து ‘கே.ஜி.எஃப்’ இயக்குநர் இயக்கவுள்ள படத்தில் நடிக்கவுள்ளேன்” என்று தெரிவித்துள்ளார்
இந்தப் பேட்டியின் மூலம் ஜூனியர் என்.டி.ஆர் – பிரசாந்த் நீல் இருவரும் இணைவது உறுதியாகிவிட்டது.

Related posts