தடுப்பூசியை பெற்றுக்கொண்டு வெளிநாடுகளில் இருந்து வருவோருக்கு

கொரோனா வைரஸ் தடுப்பூசியை பெற்றுக்கொண்டு வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு வருகை தரும் நபர்களை தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்துவதில்லை என்ற தீர்மானம் மேற்கொள்ளப்படவுள்ளதாக கொேரானா வைரஸ் ஒழிப்புக்கான தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தின் தலைவர் இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

நாட்டில் தற்போது பெரும்பாலும் கொரோனா வைரஸ் பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என தெரிவித்துள்ள அவர், வெளிநாடுகளிலிருந்து தடுப்பூசிகளை பெற்றுக்கொண்டு நாட்டுக்கு வருவோருக்கு தனிமைப்படுத்தல் அவசியம் இல்லை என தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அதேப்போன்று 96மணித்தியாலங்களுக்கு குறைந்த காலத்தில் நாட்டிலிருந்து வெளியில் சென்று வாயு குமிழின் கீழ் மீண்டும் வருகை தருவரானால் அத்தகைய நபர் ஏழு நாட்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டு அதனையடுத்து 5தினங்களுக்கு பின்னர் பிசிஆர் பரிசோதனை ஒன்று மேற்கொள்ளப்பட்டு அதன் பின்னர் தனிமைப் படுத்தலிலிருந்து விடுவிக்கப்படுவார்.

அவ்வாறின்றி நான்கு நாட்களுக்கு மேல் அவ்வாறு வெளிநாடுகள் சென்று மீண்டும் நாட்டுக்கு திரும்புவதற்கு உடனடியாக பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு அத்துடன் ஐந்து அல்லது ஏழு நாட்களுக்குள் இரண்டாவது பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படும். அதன் பின்னர் அவரை விடுவிப்பது தொடர்பில் தீர்மானிக்கப்படும் அதற்கான செயல்திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.

கொரோனா வைரஸ் எந்த சந்தர்ப்பத்திலும் அதன் நிலையை மாற்றிக் கொள்ளும் தன்மை கொண்டுள்ளது. அந்த வகையில் தற்போது இந்த முறைமையின் கீழ் பரவலைத் தடுப்பதற்கு எம்மால் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றது.

எந்த விதத்திலும் நாம் கொரோனா வைரஸ் தொற்று நோயாளர்கள் இனங் காணப்படும் பிரதேசங்களில் மட்டும் இலக்காகக் கொண்டு பிசிஆர் பரிசோதனை நடத்தவில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

லோரன்ஸ் செல்வநாயகம்

Related posts