புதிய படத்தில் இரட்டை வேடங்களில் கார்த்தி

பாக்யராஜ் கண்ணன் இயக்கிய சுல்தான் படத்தில் கார்த்தி நடித்து முடித்துள்ளார். இந்த படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. தற்போது மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து வருகிறார். இதில் அவர் வந்தியத்தேவன் கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. படப்பிடிப்பு இறுதிகட்டத்தில் உள்ளது. இந்த படத்துக்கு பிறகு மித்ரன் இயக்கும் படத்தில் கார்த்தி நடிக்கிறார். மித்ரன் ஏற்கனவே விஷால் நடித்த இரும்புத்திரை, சிவகார்த்திகேயன் நடித்த ஹீரோ படங்களை இயக்கி பிரபலமானவர். கார்த்தி-மித்ரன் கூட்டணியில் உருவாகும் படத்தின் படப்பிடிப்பை அடுத்த மாதம் தொடங்க திட்டமிட்டு உள்ளனர். அதிரடி திகில் கதையம்சம் உள்ள படமாக தயாராகிறது. இதில் கார்த்தி இரட்டை வேடத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 2011-ல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற சிறுத்தை படத்திலும் கார்த்தி இரு வேடங்களில் நடித்து இருந்தார். அந்த படத்துக்கு பெரிய வரவேற்பு கிடைத்தது. மீண்டும் அவர் இரட்டை வேடங்களில் நடிக்க இருப்பதால் படத்துக்கு எதிர்பார்ப்பு உள்ளது.

Related posts