இம்ரானின் விஜயத்தில் இராதாவுக்கு சந்தேகம்?

எதிர்வரும் 22 ஆம் திகதி இலங்கைக்கு வருகின்ற பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானின் இலங்கைக்கான விஜயம் இந்திய அரசாங்கத்திற்கு எதிரானதாக அமைந்து விடக்கூடாது. அப்படி அமைந்து விடுமோ என்ற சந்தேகம் ஏற்படுகின்றது என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக நேற்று (14) நுவரெலியாவில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

தற்பொழுது இலங்கையில் இந்தியாவிற்கு எதிரான ஒரு நிலைப்பாடு ஏற்பட்டுள்ளது. அதற்கு காரணம் கொழும்பு துறைமுகம் தொடர்பான ஏற்பட்டுள்ள முறுகல் நிலையாகும். ஏற்கனவே இந்திய அரசாங்கத்திற்கு வழங்குவதற்கு தயாராக இருந்த நிலையில் இலங்கையில் ஏற்பட்ட பல்வேறு தரப்பினரின் இந்திய எதிர்ப்பு போராட்டம் காரணமாக இந்த தீர்மானம் கைவிடப்பட்டுள்ளது.

இதன் காரணமாக தற்பொழுது இந்தியா தொடர்பாக இலங்கையில் பல்வேறு முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளது. இவ்வாறான ஒரு நிலையில் பாகிஸ்தான் பிரதமரின் இலங்கைக்கான திடீர் விஜயம் பல கேள்விகளை எழுப்புகின்றது.

பாகிஸ்தான் பிரதமரின் இலங்கை விஜயமானது இந்தியாவிற்கு எதிரானதாக அமைந்து விடக்கூடாது. ஏனேனில் இந்தியா என்பது எமது குடும்பத்தில் ஒருவர் போல பல்வேறு இக்கட்டான சந்தர்ப்பங்களிலும் இந்தியாவின் உதவி எமக்கு கிடைத்துள்ளது.

குறிப்பாக அது யுத்த காலமாக இருந்தாலும் சரி யுத்தத்தின் பின்பாக இருந்தாலும் சரி சுனாமியின் போதும் 2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்பு இலங்கை சுற்றுலா துறைக்கு பாதுகாப்பான நாடு இல்லை என சர்வதேசம் குறிப்பிட்டிருந்த நிலையிலும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு விஜயம் செய்து இலங்கை பாதுகாப்பான நாடு என்பதை சர்வதேசத்திற்கு எடுத்துரைத்தார்.அதன் பின்பே எங்களுடைய நாட்டின் சுற்றுலாத் துறை படிப்படியாக வளர்ச்சியடைந்து வந்தது.

எனவே, இந்தியா என்ற நாட்டை நாம் நேரடியாகவோ மறைமுகமாகவோ பகைத்துக் கொள்வது என்பது பிழையான ஒரு அரசியல் நகர்வாகும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Related posts