யாழ் – கொழும்பு குளிரூட்டப்பட்ட ரயில் சேவை

யாழ்ப்பாணம் – கொழும்புக்கிடையே குளிரூட்டப்பட்ட நகர் சேர் (நகரங்களுக்கிடையிலான) சேவையில் ஈடுபடும் ரயிலில் இரண்டாம் மற்றும் மூன்றாம் வகுப்புப் பயணிகள் பெட்டிகள் நேற்று முதல் இணைக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் ரயில் நிலைய பிரதான அதிபர் தி.பிரதீபன் தெரிவித்தார். இச் சேவை தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், கல்கிஸையிலிருந்து தினமும் அதிகாலை 5.10 மணிக்கு புறப்படும் குளிரூட்டப்பட்ட நகர்சேர் ரயில் கோட்டை ரயில் நிலையத்திலிருந்து அதிகாலை 5.30 மணிக்கு புறப்பட்டு நண்பகல் 12.30 மணிக்கு யாழ்ப்பாணத்தை வந்தடையும். காங்கேசன்துறையிலிருந்து பிற்பகல் 1.15 மணிக்கு புறப்படும் ரயில் யாழ்ப்பாணம் பிரதான ரயில் நிலையத்திலிருந்து பிற்பகல் 1.37 மணிக்கு கொழும்பு புறப்படும். இச் சேவையில் இதுவரை குளிரூட்டப்பட்ட வகுப்புகளே காணப்பட்டன. எனினும் நேற்று முதல் இந்தச் சேவையில் இரண்டாம் மற்றும் மூன்றாம் வகுப்புக்கான பெட்டிகள் இணைக்கப்பட்டு பயணிகள் ஆசனங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன. இரண்டாம் வகுப்புக்கு 1,000 ரூபாவும் மூன்றாம் வகுப்புக்கு 700 ரூபாவும் கட்டணம் அறவிடப்படும். எனினும் இச் சேவைகளுக்கான இருக்கைகள் அனைத்தும் முற்பதிவு செய்யப்பட வேண்டும் என்றார்.

Related posts