மீண்டும் இணையும் சரத்குமார் – லாரன்ஸ்

ருத்ரன்’ திரைப்படத்தில் நாயகன் ராகவா லாரன்ஸோடு சரத்குமாரும் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கிறார். இது குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
‘பொல்லாதவன்’, ‘ஜிகர்த்ண்டா’ உள்ளிட்ட திரைப்படங்களின் தயாரிப்பாளர் ‘ஃபைவ் ஸ்டார்’ கதிரேசன் இயக்குநராக அறிமுகமாகும் திரைப்படம் ‘ருத்ரன்’.
லாரன்ஸ் பாணியில் திகில் திரைப்படமாகவே உருவாகும் இதில் ப்ரியா பவானி சங்கர் நாயகியாக நடிக்கிறார். ஜிவி பிரகாஷ் இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார்.
இந்நிலையில் இந்தப் படத்தில் சரத்குமாரும் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கவிருப்பதாக தயாரிப்புத் தரப்பு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
ட்விட்டரில், ‘சரத்குமாரை எங்கள் படத்துக்கு வரவேற்கிறோம்’ என்று ஃபைவ்ஸ்டார் க்ரியேஷன்ஸ் தங்கள் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. ருத்ரனில் நடிப்பதைத் தான் எதிர்நோக்குவதாக சரத்குமார் பகிர்ந்துள்ளார்.
இதற்கு முன் 2011ஆம் ஆண்டு ‘காஞ்சனா’ திரைப்படத்தில் லாரன்ஸும், சரத்குமாரும் நடித்திருந்தனர். லாரன்ஸ் இயக்கியிருந்த இந்தப் படத்தில் சரத்குமார் திருநங்கை கதாபாத்திரத்தில் நடித்து பலரது பாராட்டுகளைப் பெற்றார்.
‘காஞ்சனா’ படத்தில் சரத்குமாரும் லாரன்ஸும் இணைந்து வருவது போன்ற காட்சிகள் இருக்காது. எனவே ‘ருத்ரன்’ திரைப்படத்தில் சரத்குமாரின் கதாபாத்திரம் குறித்த ஆர்வம் இப்போதே காஞ்சனா ரசிகர்களிடம் எழுந்துள்ளது.
கடந்த ஆண்டு காஞ்சனாவின் இந்தி ரீமேக்கை ராகவா லாரன்ஸ் இயக்கியிருந்தார். இதில் நாயகனாகவும், திருநங்கையாகவும் அக்‌ஷய் குமார் நடித்திருந்தார். ஓடிடியில் நேரடியாக வெளியான இந்தப் படம் மோசமான விமர்சனங்களையே சந்தித்தது நினைவுகூரத்தக்கது.

Related posts