மறைந்த வசந்தகுமாரின் மகன் விஜய் வசந்த்

இறுதி சடங்கு அகஸ்தீஸ்வரத்தில் நடைபெறும் என்று மறைந்த வசந்தகுமாரின் மகன் விஜய் வசந்த் தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக கடந்த 10-ந்தேதி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் வசந்தகுமார் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை மோசமடைந்ததால் செயற்கை சுவாச கருவி உதவியுடன் மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில், நேற்று இரவு 6.56 மணியளவில் வசந்தகுமார் உயிர் பிரிந்தது.
அவரது மறைவுக்கு பிரதமர் மோடி, ராகுல்காந்தி , தெலங்கானா ஆளுனர் தமிழிசை சவுந்தரராஜன், தமிழக ஆளுனர் பன்வாரிலால் புரோகித், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி , துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி , திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இன்று காலை அப்பல்லோ மருத்துவமனையில் இருந்து காங்கிரஸ் கொடி போர்த்தப்பட்டு வசந்தகுமார் எம்.பி, உடல் அவரது வீட்டிற்கு எடுத்துச்செல்லப்பட்டது. தி.நகர் நடேசன் தெருவில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்ட வசந்தகுமார் உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து, காமராஜர் அரங்கில் வைக்கப்பட்ட வசந்தகுமார் உடலுக்கு காங்கிரஸ் நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர்.
இதையடுத்து, வசந்தகுமார் எம்.பி, உடல் அவரது சொந்த ஊரான கன்னியாகுமரி அகத்தீஸ்வரம் கொண்டு செல்லப்படுகிறது.
இந்நிலையில், குடும்ப உறுப்பினர்கள், நெருங்கிய நண்பர்கள், ஊர்மக்களுடன் இறுதி சடங்கு நாளை நடைபெறும் என்றும், காலதாமதம் காரணமாகவே சத்தியமூர்த்தி பவனில் வைக்கப்படவில்லை என்றும் மறைந்த வசந்தகுமாரின் மகன் விஜய் வசந்த் தெரிவித்தார்.
—–
கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் கட்சி நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழக காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவருமான ஹெச்.வசந்தகுமாரின் திடீர் மறைவுக்கு திமுகவின் இந்தக் கூட்டம் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது.
கரோனா என்ற கொடிய நோய் அவரை நம்மிடமிருந்து கொடூரமாகப் பறித்து விட்டது அதிர்ச்சியளிக்கிறது.
குமரி அனந்தனின் சகோதரரும், தெலங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனின் சித்தப்பாவுமான வசந்தகுமார், இன்முகத்திற்கும், எளிமைக்கும் இணைபிரியாத சொந்தக்காரர்.
தொகுதி மக்களின் பாசத்தை கட்சி வித்தியாசமின்றிப் பெற்றவர்.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள நாங்குநேரி சட்டப்பேரவைத் தொகுதியிலிருந்து இரு முறை தேர்ந்தெடுக்கப்பெற்ற அவர், சென்ற மக்களவைத் தேர்தலில் கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று, ‘மக்கள் பணியே மகேசன் பணி’ என்று பாடுபட்டவர்.
வெற்றிக் கொடிகட்டு, ‘வெற்றிப் படிக்கட்டு’ ஆகிய புத்தகங்களை எழுதி இளைஞர்களுக்கு தன்னம்பிக்கையூட்டிய பெருந்தகையாளர்.
கடின உழைப்பால் ‘வசந்த் அண்ட் கோ’ என்ற நிறுவனத்தைக் கட்டியெழுப்பி, கடைக்கோடி மக்களின் அன்பைப் பெற்றவர்.
காங்கிரஸ் கட்சிக்காக ‘வசந்த் டிவி’யைத் தோற்றுவித்து, அரசியல் வேறு, மக்கள் பணி வேறு, வர்த்தகம் வேறு என்பதைத் தெளிவாக வரையறுத்துக் கொண்டு, பொதுவாழ்வில் தனி முத்திரை பதித்த வசந்தகுமார், சோனியா காந்தி மற்றும் ராகுல்காந்தியின் பேரன்பைப் பெற்றவர்.

Related posts