சென்னையில் கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும்

சென்னையில் அடுத்த 5-6 நாட்களுக்குக் கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என, கரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சென்னை ராயபுரத்தில் இன்று (மே 10) சென்னையில் கரோனா தடுப்பு நடவடிக்கைக்காக நியமிக்கப்பட்டுள்ள சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்துப் பேசியதாவது:சென்னையில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை வைத்து மக்கள் அச்சப்பட வேண்டியதில்லை. சென்னையில் கோயம்பேடு சந்தை மற்றும் வட சென்னையில் கூடுதலாக 19 மருத்துவர்கள் நியமிக்கப்பட்டு அதிகமாக பரிசோதனை செய்கிறோம்.
வட சென்னையில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரை பரிசோதிக்கிறோம். நோயாளிகளின் எண்ணிக்கையைக் குறைத்துக் காண்பிக்க பரிசோதனை செய்யாமல் இருப்பதில்லை.
நாள்தோறும் கன்காணித்து 3,500 பேரை பரிசோதிக்கிறோம். அதனால் அடுத்த 5-6 நாட்களுக்குக் கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும். தமிழகத்தில் தான் கரோனா பரிசோதனை மையங்கள் அதிகம். 52 பரிசோதனை மையங்கள் உள்ளன. சென்னையில் தான் அதிகமாக பரிசோதிக்கிறோம்.
சென்னையில் குடும்பங்களில் உள்ள அனைவரும் பாதிக்கப்படுபவர்களாக உள்ளனர். இதில் பலருக்கும் அறிகுறிகள் இல்லை, இது நல்ல செய்தி. பாதிக்கப்படக்கூடியவர்களாக உள்ள நீரிழிவு, ரத்த அழுத்தம் உள்ள நோயாளிகள், சிறுநீரக நோயாளிகள், மூச்சுத்திணறல் உள்ளவர்கள், முதியவர்களுக்கு நேரடியாக சென்று பரிசோதனை செய்கிறோம்.
அடுத்த ஒரு வார காலத்திற்கு எண்ணிக்கையில் ஏற்றத்தாழ்வுகள் இருக்கும். கோயம்பேடு சந்தை மூலம் பாதிக்கப்படுவது இப்போது நிலையாகி வருகிறது. ஆனால், வடசென்னை, திருவான்மியூர் சந்தையில் இப்போது பாதிப்புகள் உள்ளன”
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
பேட்டியின்போது, சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் உடனிருந்தார்.

Related posts