மருத்துவர் உடலை அடக்கம் செய்வதை தடுப்பதா?

மருத்துவர் உடலை அடக்கம் செய்வதை தடுப்பதா? என நடிகர்கள் கார்த்தி, விவேக் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

கொரோனா வைரஸ் பாதிப்பில் இறந்த டாக்டர் உடலை அடக்கம் செய்ய விடாமல் தடுத்து சிலர் தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். நடிகர் கார்த்தி டுவிட்டரில் கூறியிருப்பதாவது:-

‘டாக்டர் சைமன் இறுதிச் சடங்குக்கு இடையூறு செய்தது தமிழ் சமூகத்திற்கே தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது. இனியும் இதுபோன்ற தவறு நிகழாமல் நாம் பார்த்துக்கொள்ள வேண்டும் சைமன் குடும்பத்தினரிடமும், நண்பர்களிடமும் அனைவரின் சார்பாக என் ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறேன்’.

இவ்வாறு கார்த்தி கூறியுள்ளார்.

நடிகர் விவேக் வெளியிட்டுள்ள வீடியோவில் பேசி இருப்பதாவது:-

‘சில மருத்துவ உண்மைகள் மக்களுக்கு புரியவில்லை. கொரோனா வைரஸ் இறந்தவர்கள் உடலில் இருக்காது என்று உலக சுகாதார நிறுவனமே தெரிவித்து இருக்கிறது. கொரோனாவால் இறந்தவரின் உடலை எரித்தாலும், புதைத்தாலும் யாருக்கும் தொற்று பரவாது என்பதை உறுதி செய்த பிறகே இதை கூறுகிறேன். நடமாடும் தெய்வங்களாக இருக்கும் மருத்துவர்களின் உடலை அடக்கம் செய்ய விடாமல் தடுப்பது தவறானது. மருத்துவர்கள் உயிரோடு இருக்கும்போது கொண்டாட முடியவில்லை என்றாலும் இறக்கும்போது அவர்களை அவமானப்படுத்தாமல் இருக்க வேண்டும். அவருக்காக பிரார்த்தனை செய்வோம். மனித நேயத்தை காப்போம்’.

இவ்வாறு விவேக் கூறியுள்ளார்.

Related posts