நடிகர் அஜித்குமார் விரைவில் டிஸ்சார்ஜ்

நடிகர் அஜித்குமார் சிறிய அறுவை சிகிச்சைக்குப் பின் தற்போது நார்மல் வார்டுக்கு மாற்றபட்டுள்ளதாகவும், விரைவில் வீடு திரும்புவார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

மகிழ்திருமேனி இயக்கி வரும் ‘விடா முயற்சி’ படத்தில் நடித்து வருகிறார் நடிகர் அஜித்குமார். இப்படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜான் நாட்டில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது.

அங்கு படப்பிடிப்பு முடிந்து நடிகர் அஜித் அண்மையில் சென்னை திரும்பினார்.

இந்நிலையில் நேற்று (மார்ச் 7) அவர் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு என்ன பாதிப்பு என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

அஜித் உடல்நிலை: உடல்நலனில் அக்கறையுடன் இருக்கும் அஜித் தனக்கு நெருக்கமான சிலரது இழப்புகளால் கடந்த சில நாட்களாக மனதளவில் சோர்ந்து போயிருந்ததாக கூறப்படுகிறது..

இந்நிலையில், சென்னை அப்போலோ மருத்துவமனையில் நேற்று (மார்ச் 7) வழக்கமான உடல் பரிசோதனைக்குச் சென்றார். அதில் அவரின் காதுக்கு கீழ் பகுதியில் உள்ள நரம்பில் வீக்கம் இருப்பதாகவும், மைனர் ஆப்ரேஷன் மூலம் இதனை சரி செய்துவிடலாம் எனவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து அவருக்கு அறுவை சிகிச்சை நடைபெற்று இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதன் தொடர்ச்சியாக, அஜித் நார்மல் வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும், விரைவில் வீடு திரும்புவார் எனவும் அவரது உதவியாளர் சுரேஷ் சந்திரா தகவல் தெரிவித்துள்ளார். மேலும் இம்மாத இறுதியில் அவர் அடுத்தக்கட்ட படப்பிடிப்புக்காக வெளிநாடு திரும்ப உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, நடிகர் அஜித் விரைவில் நலம் பெற அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில், “மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் சகோதரர் நடிகர் அஜித்குமார் விரைவில் பூரண நலம் பெற வாழ்த்துகிறேன்” என தெரிவித்துள்ளார்.

Related posts