நடிகர் விஜய்யின் மக்கள் பணி சிறக்கட்டும்

“இந்திய ஜனநாயகத்தில் யார் வேண்டுமானாலும் அரசியல் இயக்கம் ஆரம்பிக்க உரிமையுள்ளது. நடிகர் விஜய் அரசியல் இயக்கம் தொடங்கியதற்கு நாம் அனைவரும் சேர்ந்து பாராட்டு தெரிவிப்போம்” என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

நடிகர் விஜய் ‘தமிழக வெற்றி கழகம்’ என்ற பெயரில் அரசியல் கட்சியை பதிவு செய்துள்ளார். இதன்மூலம் தனது அரசியல் பிரவேசத்தை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். இதையொட்டி தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இது குறித்து செய்தியாளர்களிடம் கூறும்போது, “இந்திய ஜனநாயகத்தில் யார் வேண்டுமானாலும் அரசியல் இயக்கம் ஆரம்பிக்க உரிமையுள்ளது. நடிகர் விஜய் அரசியல் இயக்கம் தொடங்கியதற்கு நாம் அனைவரும் சேர்ந்து பாராட்டு தெரிவிப்போம். அவரது மக்கள் பணி சிறக்கட்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

விசிக கட்சித் தலைவர் திருமாவளவன் இது குறித்து கூறும்போது, “ஜனநாயகத்தில் மக்கள் தொண்டாற்றிட யாருக்கும் எந்தவித கட்டுப்பாடும் இல்லை. யாரும், எந்த நேரத்திலும் அரசியலுக்கு வரலாம், பொதுமக்களுக்கு தொண்டாற்றலாம், அதுதான் ஜனநாயகம். அந்த வகையில் நடிகர் விஜய் கட்சியின் பெயரை அறிவித்திருப்பது வரவேற்புகுறியது. அதை வரவேற்கிறோம். நடிகர் விஜய்யின் அரசியல் சிந்தனை முற்போக்காக உள்ளதாக நான் கருதுகிறேன். அதை அவர், ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என அவர் முன்வைத்திருப்பது வரவேற்கக்கூடியது” எனத் தெரிவித்துள்ளார்.

Related posts