வருமானம் இல்லாவிட்டாலும் மனைவிக்கு ஜீவனாம்சம்

வருமானம் இல்லாவிட்டாலும் மனைவிக்கு ஜீவனாம்சம் வழங்க வேண்டியது கணவரின் கடமை என அலகாபாத் உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த ஒரு தம்பதி கடந்த 2015-ல் திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் 2016-ம் ஆண்டு, கணவர் மற்றும் அவருடைய குடும்பத்தினர் வரதட்சணை கேட்பதாக மனைவி காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். அத்துடன் அவர் தனது பெற்றோர் வீட்டுக்குச் சென்றுள்ளார். இது தொடர்பான வழக்கை விசாரித்த குடும்பநல நீதிமன்றம், மனைவிக்கு மாதந்தோறும் ஜீவனாம்சமாக ரூ.2 ஆயிரம் வழங்குமாறு உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து கணவர் சார்பில் அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் லக்னோ கிளையில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதிரேணு அகர்வால் தலைமையிலான அமர்வில் விசாரணை நடைபெற்றது.

அப்போது, “எனது மனைவி பட்டப் படிப்பு படித்துள்ளார். மாதம் ரூ.10 ஆயிரம் சம்பாதிக் கிறார். கூலி வேலை செய்து வரும் நான் இப்போது உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வருகிறேன்.

வாடகை வீட்டில் வசித்து வரும் நான் பெற்றோரை கவனித்துக் கொள்ள வேண்டிய நிலையில் உள்ளேன். எனவே என்னால் மாதம் ரூ.2 ஆயிரம் வழங்க முடியாது” என கணவர் தெரிவித்தார்.

இதைக் கேட்ட நீதிபதி கணவரின் மனுவை தள்ளுபடி செய்தார்.மேலும் அவர் பிறப்பித்த உத்தரவில், “மனைவி சம்பாதிக்கிறார் என்பதற்கான ஆதாரத்தை கணவர் தாக்கல் செய்யவில்லை. உடல் ஆரோக்கியமுடன் உள்ள தால் உடல் உழைப்பின் மூலம் பணம் சம்பாதிக்கும் தகுதி கணவருக்கு உள்ளது. எனவே, வருமானம் இல்லாவிட்டாலும் மனைவிக்கு ஜீவனாம்சம் வழங்க வேண்டியது அவரின் கடமை” என தெரிவித்துள்ளார்.

Related posts