ஜனாதிபதியின் பொது மன்னிப்பு செல்லுபடியற்றது!

இலங்கை சரித்திரத்திலே முதல் தடவையாக ஜனாதிபதி ஒருவருடைய பொது மன்னிப்பு செல்லுபடியற்றது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்து இருக்கின்றது என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

இன்று (17) முல்லைத்தீவு, மாங்குளம் நீதிமன்றத்திற்கு பொதுமக்களின் காணி விடயம் தொடர்பான வழக்கு விசாரணை ஒன்றிற்காக வருகை தந்திருந்தபோது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அந்த விடயம் தொடர்பில் தெரிவிக்கையில்,

ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸ, துமிந்த சில்வாவிற்கு கொடுத்த மன்னிப்பை புறந்தள்ளி அதுதவறாக சட்டவிரோதமாக கொடுக்கப்பட்ட மன்னிப்பு செல்லுபடியற்றது என்று தீர்ப்பு கொடுக்கப்பட்டிருக்கின்றது.

பாரதலக்ஸ்மன் பிரேமசந்திரவின் கொலை சம்பந்தமாக மரதண்டனைக்கு உட்படுத்தப்பட்ட துமிந்த சில்வாவிற்கே இந்த தீர்ப்பு கொடுக்கப்பட்டது. ஹிருணிகா பிரேமசந்திர சார்பிலே நான் ஆஜராகி இருந்து இந்த வழக்கை வாதாடி இருக்கின்றேன் .

இலங்கை சரித்திரத்திலே முதல் தடவையாக ஜனாதிபதி ஒருவருடைய மன்னிப்பு செல்லுபடியற்றது என நீதிமன்றம் தீர்ப்பளித்து இருக்கின்றது. இது வரவேற்க வேண்டிய ஒரு விடயம் வேறு சில வழக்குகளும் நிலுவையிலே இருக்கின்றன.

விஷேடமாக மிருசுவில் படுகொலையாளி சுனில்ரட்நாயக்கவிற்கு கொடுத்த மன்னிப்பையும் நாங்கள் சவாலுக்கு உட்படுத்தி இருக்கின்றோம். அந்த தீர்ப்பு இன்னும் வெளிவரவில்லை என மேலும் தெரிவித்தார்.

——

பரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்குவதற்கு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச எடுத்த தீர்மானத்தை வலுவற்றதாக்கி உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.

உயிரிழந்த பரத பிரேமச்சந்திரவின் மனைவி சுமனா பிரேமச்சந்திர, மகள் ஹிருணிகா பிரேமச்சந்திர மற்றும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளரான சட்டத்தரணி கஸாலி ஹுசைன் ஆகியோர் தாக்கல் செய்த மனுக்களை விசாரித்த பிரீத்தி பத்மன் சூரசேன தலைமையிலான மூவரடங்கிய உயர் நீதிமன்ற நீதியரசர்கள் அமர்வு இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.

இதன்படி, பிரதிவாதிக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்திற்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related posts