வெறுப்பை நாம் ஏன் சகித்துக்கொள்ள வேண்டும்?

மாலத்தீவு அமைச்சர் ஒருவரின் சர்ச்சைக்குரிய ட்வீட்டின் எதிரொலியாக திரைப்பிரபலங்கள் பலரும் லட்சத்தீவை ஆதரித்து தங்கள் கருத்துகளை வெளிப்படுத்தியுள்ளனர்.

இது தொடர்பாக பாலிவுட் நடிகர் அக்ஷய்குமார் தனது எக்ஸ் பக்கத்தில், “இந்தியர்கள் மீது வெறுக்கத்தக்க மற்றும் இனவெறி கருத்துகளை அனுப்பும் மாலத்தீவைச் சேர்ந்த முக்கிய பொது நபர்களின் கருத்துக்களைக் கண்டேன். அதிகபட்ச சுற்றுலாப் பயணிகளை அனுப்பும் நாட்டுக்கு இப்படிச் செய்வது ஆச்சரியமாக இருக்கிறது. நாம் அவர்களிடம் நல்லவர்களாக இருக்கிறோம்.

அதேசமயம் இப்படியான வெறுப்பை நாம் ஏன் பொறுத்துக்கொள்ள வேண்டும்? நான் மாலத்தீவுக்கு பலமுறை சென்றிருக்கிறேன். அதன் அழகை வியந்து பாராட்டியிருக்கிறேன். ஆனால், கண்ணியம் மிகவும் முக்கியமானது. இந்திய தீவுகளை ஆராய்ந்து நமது சொந்த சுற்றுலாவை ஆதரிப்போம்” எனப் பதிவிட்டுள்ளார்.

ஜான் ஆபிரகாம் தனது எக்ஸ்தள பக்கத்தில் மாலத்தீவுக்கு எதிராக லட்சத்தீவை புகழ்ந்துள்ளார். “அற்புதமான இந்திய விருந்தோம்பல், பரந்த கடல்சார் பகுதியான லட்சத்தீவு நாம் ரசிக்க வேண்டிய இடம்” என பதிவிட்டுள்ளார்.
நடிகை ஷ்ரத்தா கபூர், “பழமையான அழகிய கடற்கரையையும், உள்ளூர் கலாசாரத்தையும் உள்ளடக்கிய லட்சத்தீவில் எனது விடுமுறை நாட்களை செலவழிக்க ஆவலாக உள்ளேன்” என பதிவிட்டுள்ளார்.

நடிகர் சல்மான் கான், “லட்சத்தீவின் அழகான சுத்தமான மற்றும் பிரமிக்க வைக்கும் கடற்கரைகளில் நமது பிரதமர் நரேந்திர மோடியைப் பார்ப்பது மிகவும் அருமையாக இருக்கிறது. இதன் சிறப்பான அம்சம் என்னவென்றால், அது இந்தியாவில் உள்ளது” எனப் பதிவிட்டுள்ளார்.

சச்சின் டெல்டுல்கரும் இதில் இணைந்துள்ளார். “சிந்துதுர்க் பகுதியில் எனது 50வது பிறந்தநாளை கொண்டாடி 250 நாட்களுக்கும் மேலாகிவிட்டது. நாம் கேட்பதை விட அதிகமாக கொடுக்கூடியது இந்த கடல் நகரம். அற்புதமான விருந்தோம்பலுடன் இணைந்த அழகிய இடங்கள் நினைவுகளின் பொக்கிஷத்தை நமக்கு கொடுத்துச் செல்லும். இந்தியா அழகான கடற்கரைகள் மற்றும் அழகிய தீவுகளால் ஆசீர்வதிக்கப்பட்டுள்ளது” எனப் பதிவிட்டுள்ளார்.

பின்னணி: பிரதமர் மோடியின் லட்சத்தீவு பயணம் தொடர்பான மாலத்தீவு அமைச்சரின் ட்வீட் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் பயணமாக கடந்த 2-ம் தேதி லட்சத்தீவு சென்றிருந்தார். சுற்றுலாவை மேம்படுத்தும் நடவடிக்கையின் ஒருபகுதியாக இது கருதப்பட்டது.

தன்னுடைய பயணம் குறித்த அனுபவத்தை எக்ஸ் தளத்தில் பகிர்ந்திருந்த மோடி, “லட்சத்தீவு என்பது வெறும் தீவுகளின் கூட்டமல்ல. காலம் காலமாக நீடித்து வரும் பாரம்பரிய மரபு மற்றும் மக்களுக்கான சான்று அது. கற்பதற்கும் வளர்வதற்குமான வாய்ப்புள்ளதாக எனது பயணம் அமைந்தது.

லட்சத்தீவுகளின் பிரம்மிக்க வைக்கும் அழகையும், அங்கு வாழும் மக்களின் நம்ப முடியாத அரவணைப்பையும் கண்டு நான் இன்னமும் பிரமிப்பில் இருக்கிறேன். அகத்தி, பங்காராம், கரவட்டி ஆகிய இடங்களில் மக்களோடு உரையாடும் வாய்ப்பு கிடைத்தது. அவர்களின் விருந்தோம்பலுக்காக நன்றி கூறுகிறேன்” எனத் தெரிவித்திருந்தார்.

பிரதமரின் இந்தப் பயணம் குறித்து கருத்து தெரிவித்திருந்த மாலத்தீவு அமைச்சர் அப்துல்லா மஹ்சூம் மஜித் தனது சமூகவலைதளப் பக்கத்தில், இந்தியா மாலத்தீவை குறிவைக்கிறது என்றும், மாலத்தீவு கடற்கரை சுற்றுலாத்தலத்துடன் போட்டியிடுவதில் இந்தியா பல்வேறு சவால்களை எதிர்கொள்கிறது என்றும் குற்றம்சாட்டியிருந்தார். இது நெட்டிசன்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி நிலையில், பலரும் மாலத்தீவுக்கு மாற்றான சுற்றுலாத்தலமாக லட்சத்தீவை முன்வைத்தனர். பலர் தங்களின் மாலத்தீவு பயணத்தையும் ரத்து செய்தது குறிப்பிடத்தக்கது.

Related posts