மட்டக்களப்பு, அம்பாறையில் தொடர் மழை

கிழக்கு மாகணத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக மட்டக்களப்பு உன்னிச்சைக் குளம், நவகிரி குளம் மற்றும் அம்பாறை ரம்புக்கன் ஓயாவின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளமையால் மக்கள் அவதானமாக இருக்குமாறு இன்று செவ்வாய்க்கிழமை (2) மாவட்ட அனர்த்த முகாமைத்துவம் அறிவித்துள்ளது.

சீரற்ற வானிலையால் தொடர் மழை காரணமாக இன்றைய தினம் காலை 8 மணிவரையிலான 24 மணித்தியாலயத்தில் மட்டக்களப்பில் 169.4 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது.

இதன் காரணமாக பெரிய குளங்களான உன்னிச்சை, நவகிரி, வடமுனை, வெலியாகந்தை குளங்களின் நீர் மட்டம் அதிகரித்துள்ளது. அத்தோடு, உன்னிச்சை குளத்தின் 3 வான்கதவுகளும், நவகிரிகுளம், றூகம்குளம், வடமுனைகுளங்களின் வான் கதவுகள் திறந்துவிடப்பட்டுள்ளது.

அதேவேளை, அம்பாறை ரம்புக்கன் ஓயாவின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளமையால் மட்டக்களப்பு செங்கலடி, சித்தாண்டி பகுதியில் வெள்ளம் ஏற்படும் நிலைமை காணப்படுகின்றது.

மட்டு. நவகிரிகுளம் வான்கதவு திற்கப்பட்டுள்ளாதால் வெல்லாவெளி பிரதேச செயலகப் பிரிவிலுள்ள மக்களும் அவதானமாக இருக்குமாறு மாவட்ட அனர்த்த முகாமைத்துவம் அறிவித்துள்ளது.

இதேவேளை, மழை வெள்ளத்தினால் மாவட்டத்தில் உள்ள பல தாழ்நில பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதையடுத்து பல பிரதேசங்களுக்கான போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. வீடுகளில் வெள்ள நீர் புகுந்ததால் வாகரை பிரதேச செயலகப் பிரிவிலுள்ள கல்லரிப்பு பிரதேசத்தில் 56 குடும்பங்கள் இடைத்தங்கல் முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அத்துடன், பல வயல்பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts