இந்தியாவின் செல்வந்த பெண்மணி சாவித்ரி ஜிண்டால்

முகேஷ் அம்பானி, கௌதம் அதானியை விட கடந்த ஆண்டு தனது நிகர சொத்து மதிப்பை அதிக அளவில் உயர்த்தியவர் சாவித்ரி ஜிண்டால் என ப்ளூம்பெர்க் தெரிவித்துள்ளது.

இந்தியர்களில் ஐந்தாவது பணக்காரராகவும், இந்திய பெண்களில் முதல் பணக்காரராகவும் இருக்கக்கூடியவர் சாவித்ரி ஜிண்டால். ஹரியாணாவைச் சேர்ந்த மறைந்த தொழிலதிபர் ஓ.பி. ஜிண்டாலின் மனைவி.

ஓ.பி. ஜிண்டால் குழுமத்துக்கு சொந்தமாக JSW Steel, Jindal Steel & Power, JSW Engery, JSW Saw, Jindal Stainless, JSW Holdings உள்ளிட்ட நிறுவனங்கள் உள்ளன.

ஓ.பி. ஜிண்டால் குழுமம் கடந்த ஆண்டில் தனது நிகர சொத்து மதிப்பில் சுமார் ரூ.80 ஆயிரம் கோடியை (9.6 பில்லியன் டாலர்) உயர்த்தி உள்ளது. இதன்மூலம், அதன் சொத்து மதிப்பு ரூ.2 லட்சம் கோடிக்கும் மேலாக உயர்ந்துள்ளது.

இவருக்கு அடுத்ததாக கடந்த ஆண்டில் அதிக சொத்துகளைச் சேர்ந்த இரண்டாவது இந்தியராக சிவ நாடார் உருவெடுத்துள்ளார். இவர் கடந்த ஆண்டில் 8 பில்லியன் டாலர் சொத்து சேர்ந்துள்ளார். மூன்றாவது இடத்தை டிஎல்எஃப் நிறுவனத்தின் கே.பி. சிங் பிடித்துள்ளார்.

இவர் கடந்த ஆண்டில் 7 பில்லியன் டாலர் சொத்து சேர்த்துள்ளார். 6.3 பில்லியன் டாலர் சொத்து சேர்த்து குமார் மங்களம் பிர்லா 4-ம் இடம் பிடித்துள்ளார்.

அதேநேரத்தில் கடந்த ஆண்டில் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு ரூ.41 ஆயிரம் கோடி (5 பில்லியன் டாலர்) அளவுக்கே உயர்ந்துள்ளது.

எனினும், ரூ. 7.68 லட்சம் கோடி (92.3 பில்லியன் டாலர்) சொத்துகளுடன் இந்தியாவில் மட்டுமல்லாது, ஆசியாவின் முதல் பணக்காரராக இவர் தொடருகிறார்.

அதேநேரத்தில் கவுதம் அதானியின் சொத்து மதிப்பு கடந்த ஆண்டு 85.1 பில்லியன் டாலர் என்ற அளவில் இருந்து 35.4 பில்லியன் டாலர் என்ற அளவுக்கு சரிந்தது.

எனினும், முகேஷ் அம்பானிக்கு அடுத்து இந்தியாவின் இரண்டாவது பணக்காரராக அதானி தொடர்கிறார்.

Related posts